திருத்தணி முருகன் கோவிலில் மாற்று மலைப்பாதைக்கு நிலம் கையகப்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆய்வு கூட்டம்


திருத்தணி முருகன் கோவிலில் மாற்று மலைப்பாதைக்கு நிலம் கையகப்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆய்வு கூட்டம்
x

திருத்தணி முருகன் கோவிலில் மாற்று மலைப்பாதைக்கு நிலம் கையகப்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வாகனங்கள் மூலம் தரிசனத்திற்கு வருகின்றனர். மலைக்கோவிலுக்கு வாகனங்கள் சென்று வருவதற்கு ஒரே பாதை உள்ளதால் முக்கிய விழா நாட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் 2-வது மலைப்பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த இந்து அறநிலையத்துறை முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் மலைக்கோவில் இருந்து அமிர்தாபுரம் வரை இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு, 10 மீட்டர் அகலத்திற்கு மலைப்பாதை அமைப்பதற்கு ஆய்வு செய்து அறிக்கை அளித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஆணையர் அலுவலகத்தில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முருகன் கோவில் மாற்று மலைப்பாதை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து நேற்று திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் துணை ஆணையர் விஜயா தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் குமரேஸ்வரன், ஜானகி, திருத்தணி ஆர்.டி.ஓ. தீபா, தாசில்தார் உமா, வனசரகர் அருள்நாதன் மற்றும் கோவில் அறங்காவலர்கள் ஆகியோர் மாற்று மலைப்பாதை திட்டத்திற்கு இடம் கையகப்படுத்துவதில் உள்ள இடர்பாடுகள், நீர்நிலை இடங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும் மாற்றுப்பாதை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story