ஊராட்சி தலைவியின் கணவர் கொலை வழக்கு:தந்தை, மகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ஊராட்சி தலைவியின் கணவர் கொலை வழக்கு:தந்தை, மகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

கடலூர் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கொலை வழக்கில் கைதான தந்தை, மகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கடலூர்

கொலை

கடலூர் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பவர் சாந்தி. இவருடைய கணவர் மதியழகன் கடந்த மாதம் 27-ந்தேதி மஞ்சக்குப்பம் சண்முகம்பிள்ளை தெருவில் உள்ள சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தார். அப்போது அவரை முன்விரோத தகராறில் ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது.

இது பற்றி கடலூர் புதுநகர் போலீசில் ஊராட்சி மன்ற தலைவி சாந்தி கொடுத்த புகாரின் பேரில் மாசிலாமணி, பிரகலாதன், தினேஷ், ஆறுமுகம், பாரதி, குருநாதன் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டத்தில் கைது

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய தாழங்குடா பள்ளிக்கூட தெருவை சேர்ந்த ஆறுமுகம்(வயது 53), அவரது மகன் தினேஷ்(24) ஆகிய 2 பேரின் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில், அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின்பேரில் ஆறுமுகம், தினேஷ் ஆகிய 2 பேரையும் கடலூர் புதுநகர் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். அதற்கான உத்தரவு நகலை சிறையில் இருக்கும் அவர்களிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.


Next Story