பொதுமக்கள் சாலை மறியல்


பொதுமக்கள் சாலை மறியல்
x

பழனி அருகே ஆயக்குடி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

பழனி அருகே உள்ள ஆயக்குடி பகுதியில் வசிக்கிற பொதுமக்கள், ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு அவர்கள், திடீரென திண்டுக்கல் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவலறிந்த ஆயக்குடி போலீசார் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பேரூராட்சி பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடு நடப்பதாக குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறும்போது, குடிநீர் இணைப்புக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமான கட்டணம் வசூலிக்கின்றனர். விண்ணப்பம் வழங்குவதிலும் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். எனவே உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இணைப்பு வழங்க வேண்டும் என்றனர்.


Next Story