14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த புதுக்கோட்டை வாலிபருக்கு ஆயுள் தண்டனை-மகிளா கோர்ட்டு தீர்ப்பு


14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த புதுக்கோட்டை வாலிபருக்கு ஆயுள் தண்டனை-மகிளா கோர்ட்டு தீர்ப்பு
x

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த புதுக்கோட்டை வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை

சிறுமி கர்ப்பம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 35). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு 8-ம் வகுப்பு மாணவியான 14 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி கர்ப்பமடைந்தார். இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். சிறுமியிடம் விசாரித்த போது அவர் பாலமுருகன் தன்னிடம் நடந்து கொண்ட விவரத்தை தெரிவித்தார்.

இதையடுத்து அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆயுள் தண்டனை

இதற்கிடையில் சிறுமிக்கு கடந்த 2022-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் போக்சோ வழக்கில் ஒரு பிரிவில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், மற்றொரு பிரிவில் ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து இதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். அதன்படி பாலமுருகன் ஆயுள் தண்டனையை அனுபவிக்க உள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கனவே ரூ.2 லட்சம் அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அபராதமாக விதிக்கப்பட்ட ரூ.2½ லட்சத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிபதி கண்டிப்பு

தண்டனை விதிக்கப்பட்ட பாலமுருகனை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார். முன்னதாக தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பு பாலமுருகன், தான் அந்த சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறினார். தவறு செய்த பின் மறுத்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்வதாக கூறுவதை நீதிபதி கடுமையாக கண்டித்தார். பாலமுருகனுக்கு பிறந்த குழந்தை தத்து கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story