எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் நிலையத்தை முற்றுகை உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு


எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் நிலையத்தை முற்றுகை    உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு
x
தினத்தந்தி 28 Oct 2022 6:45 PM GMT (Updated: 28 Oct 2022 6:46 PM GMT)

உளுந்தூர்பேட்டை ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி


உளுந்தூர்பேட்டை,

ரெயில் நிலையம் முற்றுகை

உளுந்தூர்பேட்டை ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உளுந்தூர்பேட்டை ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக திருநாவலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் சின்னதுரை எம்.எல்.ஏ., கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்து ரெயில் நிலைய நுழைவு வாயிலை முற்றுகையிட்டு உள்ளே செல்ல முயன்றனர்.

தள்ளுமுள்ளு

இதுபற்றி தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ரெயில் நிலையத்துக்குள் செல்லாதவாறு தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கட்சியினர் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த தாசில்தார் மணிமேகலை தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சமாதான கூட்டம் நடத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம் எனவும், போராட்டத்தை கைவிடவேண்டும் எனவும் கட்சி நிர்வாகிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்ற மார்க்சிஸ்ட் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story