தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்...!


தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்...!
x

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது.

சென்னை,

நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 3-ம் தேதி வாக்கில் புயலாக வலுப்பெற கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து 4-ம் தேதி அதிகாலை வாக்கில் வடதமிழகம்- தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும், என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று முதல் 5-ம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story