பணியின்போது உயிரிழந்த குடிநீர் வாரிய தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் - முதல் அமைச்சர் உத்தரவு


பணியின்போது உயிரிழந்த குடிநீர் வாரிய தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் - முதல் அமைச்சர் உத்தரவு
x

பணியின்போது உயிரிழந்த குடிநீர் வாரிய தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கிட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தூய்மைப் பணியை மேற்கொள்ளும் போது உயிரிழந்த சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்தத் தொழிலாளர் நெல்சன் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக ரூ.15 லட்சம் வழங்கிட தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூய்மைப் பணியை மேற்கொள்ளும் போது உயிரிழந்த சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்தத் தொழிலாளர் நெல்சன் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக ரூ.15 லட்சம் வழங்கிட தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று முன்தினம் காலை முதல் ஜெட் ராடிங் மற்றும் சூப்பர் சக்கர் இயந்திரத்தை பயன்படுத்தி மாதவரம் முத்துமாரியம்மன் தெருவில் கழிவுநீர் அடைப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, பிற்பகல் சுமார் 2.30 மணி அளவில் ஒப்பந்த தொழிலாளி நெல்சன் என்கிற கட்டாரி (26), இயந்திரத் துளையில் ஏதேனும் கல், துணி அடைக்கப்பட்டுள்ளதா என்று சாலையில் நின்று கவனித்த போது, எதிர்பாராத விதமாக இயந்திர துளையில் தவறி விழுந்துவிட்டார்.

அவரை காப்பாற்ற முயன்ற மற்றொரு ஒப்பந்த தொழிலாளி ரவி வயது சுமார் 35, அவரும் இயந்திர துளையில் விழுந்து விட்டார். உடனடியாக, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருவரையும் உயிருடன் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் ஒப்பந்த தொழிலாளி நெல்சன் என்கிற கட்டாரி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். மேலும் மற்றொரு தொழிலாளி ரவிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த தொழிலாளி நெல்சன் என்கிற கட்டாரி குடும்பத்துக்கு இழப்பீடாக 07.06.2022 தேதியிட்ட நகர் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை எண் 83-இன் படி ரூ.15 லட்சம் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story