பிளஸ்-2 பாடப்புத்தகத்தில் சனாதனம் : சேகர்பாபு, உதயநிதிக்கு அட்வைஸ் செய்த அண்ணாமலை..!!


பிளஸ்-2 பாடப்புத்தகத்தில் சனாதனம் : சேகர்பாபு, உதயநிதிக்கு அட்வைஸ் செய்த அண்ணாமலை..!!
x

பிளஸ்-2 பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சனாதனத்தை சுட்டிக்காட்டி அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதிக்கு அண்ணாமலை அறிவுரை வழங்கி உள்ளார்.

சென்னை,

சனாதன தர்மத்திற்கு எதிராக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் தொடர்ந்து விவாதப்பொருளாகி உள்ளது. சனாதனத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டு பேசிய அவர், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றார். இதனால் அவரை இந்து அமைப்பினரும், பாஜகவினரும் தொடர்ந்து விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் உதயநிதி ஸ்டாலின், தனது பேச்சை நியாயப்படுத்துவதுடன், சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலையில்லை என்றார்.

இந்த விவாதம் ஒருபுறமிருக்க, தமிழ்நாடு அரசின் பாடப்புத்தகத்தில் இந்து சமயம் மற்றும் சனாதன தர்மத்திற்கு ஆதரவாக கருத்துகள் இடம்பெற்றிருக்கின்றன. தமிழ்நாடு அரசின் மேல்நிலை இரண்டாம் ஆண்டுக்கான (பிளஸ்-2 ) அறவியலும் இந்திய பண்பாடும் என்ற பாட புத்தகத்தின் பக்கம் 58-ல், "இந்து அல்லது ஹிந்து என்ற சொல்லை ஹிம்+து எனப் பிரிக்கலாம். ஹிம்-ஹிம்சையில், து-துக்கிப்பவன் எனப் பொருள்படும். ஓர் உயிர் எந்த காரணத்தினாலாவது வருந்துவதாகவே இருந்தால், அத்துயரத்தை தனக்கேற்பட்ட துயரமாகக் கருதி, அகற்ற முன் வருபவனே இந்து ஆவான். அப்பண்புமிக்க மக்களைக் கொண்ட சமயமே இந்து சமயமாகும்.

இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. சனாதன தருமம் என்றால் அழிவில்லாத நிலையான அறம் எனப்படும்," என்ற தகவல் இடம்பெற்று இருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்களை மோடியின் ஆதரவாளர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் பிளஸ்-2 பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சனாதனத்தை சுட்டிக்காட்டி அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதிக்கு தமிழக பாஜனதா தலைவர் அண்ணாமலை அறிவுரை வழங்கி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், "திரு உதயநிதி ஸ்டாலின் & திரு சேகர் பாபு ஆகியோர் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியதால் அனைத்துத் தரப்பிலிருந்தும் கண்டனங்களைப் பெற்றனர். அதன் பிறகு இந்து மதமும், சனாதன தர்மமும் வேறு என்று கூறினர்.

சனாதன தர்மமும் இந்து மதமும் ஒன்றே என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள பிளஸ்-2 பாடப்புத்தகம் கூறுகிறது. சனாதன தர்மமே, நித்திய தர்மம் என்றும் குறிப்பிடுகிறது. பி.கே.சேகர் பாபு & உதயநிதி ஸ்டாலினை அறிவொளி பெற இந்த வகுப்பில் சேருமாறு அறிவுறுத்துகிறோம்" என்று அதில் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.




Next Story