டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்


டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்
x

ஆலங்குடி அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே உள்ள இச்சடி கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்று காலை அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் கும்முப்பட்டி, இச்சடி, முள்ளூர், முக்காணிப்பட்டி கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் தஞ்சாவூர்-கறம்பக்குடி நெடுஞ்சாலை இச்சடி முக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை தாசில்தார் விஜயலெட்சுமி, துணை தாசில்தார் கவியரசு, ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக்ரஜினி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அந்த கடையை மூடுவதாக கூறி தாசில்தார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் கடைக்கு பூட்டு போட்டு பூட்டினார்கள். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story