சேதமடைந்த கட்டிடங்களில் இயங்கும் பள்ளிக்கூடங்கள்


சேதமடைந்த கட்டிடங்களில் இயங்கும் பள்ளிக்கூடங்கள்
x
தினத்தந்தி 16 Oct 2022 6:45 PM GMT (Updated: 16 Oct 2022 6:46 PM GMT)

சேதமடைந்த கட்டிடங்களில் இயங்கும் பள்ளிக்கூடங்கள் விபரீதம் நிகழும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா

விழுப்புரம்

விழுப்புரம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நெல்லையில் தனியார் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்திற்கு பிறகு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி கட்டிடங்களையும் ஆய்வு செய்து, உறுதி தன்மையற்றதை இடித்து அகற்ற அரசு உத்தரவிட்டது. அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு படிப்படியாக அந்த கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

1,806 பள்ளிகள்

விழுப்புரம் மாவட்டத்தில் 1,208 அரசு பள்ளிகள், 17 நகராட்சி பள்ளிகள், 65 அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகள், 199 நிதி உதவி பெறும் பள்ளிகள், 23 பகுதிநேர நிதி உதவி பெறும் பள்ளிகள், 89 மெட்ரிக் பள்ளிகள், 140 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள், 3 சிறப்பு பள்ளிகள், 26 சி.பி.எஸ்.இ. பள்ளிகள், 36 சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 1,806 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் தொடக்கப்பள்ளிகளில் 1,39,279 மாணவ- மாணவிகள், நடுநிலைப்பள்ளிகளில் 77,975 மாணவ- மாணவிகள், உயர்நிலைப்பள்ளிகளில் 52,219 மாணவ- மாணவிகள், மேல்நிலைப்பள்ளிகளில் 45,296 மாணவ- மாணவிகள் என மொத்தம் 3 லட்சத்து 14 ஆயிரத்து 769 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் 12,628 ஆசிரிய-ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.

சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள்

இம்மாவட்டத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு பட்டியலின்படி அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 363 கட்டிடங்கள் சேதமடைந்த கட்டிடங்கள் என கண்டறியப்பட்டன. இவற்றில் 274 கட்டிடங்கள் இதுவரை இடிக்கப்பட்டுள்ளன. இன்னும் 89 கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளன. இதேபோல் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 104 கட்டிடங்கள் சேதமடைந்த கட்டிடங்கள் என கண்டறியப்பட்ட நிலையில் அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்பட்டுள்ளன.

சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தும் பணி ஒருபுறம் விரைவாக நடந்து வருவதாக சொல்லப்பட்டாலும் சில இடங்களில் சேதமடைந்த கட்டிடங்களை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தாமல் பாதியிலேயே அப்பணியை கிடப்பில் போட்டுள்ளனர். இன்னும் சில இடங்களில் சேதமடைந்த கட்டிடங்களை முழுமையாக இடித்தபோதிலும் அதன் கட்டிட கழிவுகளை அங்கிருந்து அப்புறப்படுத்தாமல் அங்கேயே போட்டு வைத்துள்ளனர். இதுதவிர சில பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் என கண்டறிந்து கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதோடு சரி அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படாமல் அக்கட்டிடங்களை பூட்டியே வைத்துள்ளனர். இதனால் பள்ளி இடைவேளை நேரங்களில் மாணவ- மாணவிகள் அந்த கட்டிடத்திற்குள் விளையாடும்பட்சத்தில் ஏதேனும் விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மாணவ- மாணவிகள் அச்சம்

மேலும் சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் முழுமையாக இடித்து அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் அந்த இடத்தில் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கான நடவடிக்கையும் உடனடியாக எடுத்ததாக தெரியவில்லை. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தில் படித்து வந்த மாணவ- மாணவிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டித்தரப்படாததாலும், போதிய வகுப்பறைகள் இல்லாததாலும் அம்மாணவ- மாணவிகள் அப்பள்ளியின் வளாகத்தில் தரையிலும், மரத்தடியில் அமர்ந்தும் மற்றும் அருகில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள், தனியார் கட்டிடத்திலும் வைத்து தற்காலிகமாக கல்வி கற்றுத்தரப்படுகிறது.

அதுபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்கள் ஆங்காங்கே சிறு, சிறு பழுதுகளுடன் இயங்கி வருகிறபோதிலும் அந்த கட்டிடங்களை செப்பனிட்டு சீரமைத்தால் இன்னும் சில ஆண்டுகள் அங்கு வகுப்புகள் நடத்தப்படும் நிலையில் இருக்கும் கட்டிடங்களையும் அதிகாரிகள் சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்காததால் அங்குள்ள மாணவ- மாணவிகள் ஒருவித அச்சத்துடனேயே கல்வி பயின்று வருகின்றனர்.



Next Story