தமிழ்நாட்டில் இதுவரை 43 பேர் தற்கொலைஉயிரை விழுங்கும் 'ஆன்லைன்' சூதாட்டம்தடை எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


தமிழ்நாட்டில் இதுவரை 43 பேர் தற்கொலைஉயிரை விழுங்கும் ஆன்லைன் சூதாட்டம்தடை எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 14 Feb 2023 6:45 PM GMT (Updated: 14 Feb 2023 6:46 PM GMT)

உயிரை விழுங்கும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எப்போது தடை விதிக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தேனி

ஆன்லைன் என்று சொல்லப்படும் இணையதளத்தை பயன்படுத்துவது இன்று அத்தியாவசியமாக மாறிவிட்டது.

அதில் பல நன்மைகள் இருந்தாலும், தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. நன்மைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு செயல்படுபவர்கள் புத்திசாலிகள் ஆகிவிடுகிறார்கள். அதன் தீங்கு வலைகளில் சிக்கி விடுபவர்கள் இனிய உயிர்களை இழந்து போகிறார்கள்.

சூதாட்ட விளையாட்டுகள்

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் இப்போது உயிரை விழுங்கும் விளையாட்டாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. வயது வித்தியாசம் பார்க்காமல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இதில் அடிமையாகி கிடக்கின்றனர்.இந்த வகையான சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் நபர், அடுத்து வாழ்வில் என்ன செய்வது? என்று தெரியாமல், பயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் சமீபகாலங்களாக அதிகரித்து வருகின்றன.

தொடரும் தற்கொலைகள்

கடந்த வாரத்தில்கூட மதுரை மாவட்டம் சாத்தமங்கலத்தை சேர்ந்த ஓட்டல் ஊழியர் குணசீலன் என்பவர், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தை இழந்ததால், தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல், சேலம் மாவட்டம் ஆத்தூர், உடையார் பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பிரபு என்பவரும், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

இதுவரை தமிழ்நாட்டில் 43 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக்கொண்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆசையை தூண்டி, விளையாட வைத்து, பணத்தை இழப்பதோடு, உயிரை மாய்க்க வைக்கும் இதுபோன்ற சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்த வண்ணமே இருக்கின்றன.

தடை சட்ட மசோதா

அரசும் இந்த ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை சட்டம் கொண்டு வந்த நிலையில், அதனை சென்னை ஐகோர்ட்டு வாயிலாக சூதாட்ட நிறுவனங்கள் உடைத்தது. அதன்பின்னர், கடந்த ஆண்டு (2022) ஜூன் மாதம் மீண்டும் இதற்கான தடை சட்டம் இயற்றுவது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.அந்த குழு புதிதாக ஒரு சட்டம் இயற்ற பரிந்துரை அளித்தது.

அதனை அடிப்படையாக கொண்டு, பொதுமக்கள், தன்னார்வலர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அவசர சட்டம் இயற்றப்பட்டு, அதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. அதற்கு கவர்னரும் ஒப்புதல் அளித்தார். பின்னர், தடை சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ஒப்புதல் எப்போது?

இந்த புதிய சட்டப்படி, தமிழ்நாட்டில் எந்தவொரு தனிநபரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட முடியாது. அவ்வாறு ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் தனிநபருக்கு 3 மாத சிறை தண்டனையும், அந்த சூதாட்ட நிறுவனத்தின் தலைவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு, கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். அரசு தரப்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், கவர்னரை நேரில் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தி உள்ளார். இந்த சட்ட மசோதாவுக்கு விரைந்து கவர்னர் ஒப்புதல் கொடுத்து, சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விழிப்புணர்வு அவசியம்

இதுதொடர்பாக மருத்துவ மனநல ஆலோசகர் டாக்டர் வந்தனா கூறும்போது, 'சூதாட்டத்தில் பணத்தை இழந்து, மனதளவில் சோர்வடைபவர்களின் கடைசி கட்டம்தான் தற்கொலை. அதுபோன்ற நிலையில் இருப்பவர்கள் உடனடியாக மனநல ஆலோசகர்களை அணுகுவது அவசியம். அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள்? என்பதை பார்த்து அதற்கேற்றபடி சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.

மருந்து, மாத்திரைகளினால் சிலரையும், ஆலோசனைகள் மூலம் சிலரையும் சூதாட்ட அடிமையில் இருந்து வெளியில் கொண்டுவரலாம். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான முழு முயற்சிகளை அரசு கண்டிப்பாக எடுக்க வேண்டும். இந்த வகை சூதாட்டத்தில் ஆண்கள்தான் அதிகம் ஈடுபடுவதாக நினைக்கிறோம். ஆனால் இந்த விளையாட்டை எளிதில் அணுக முடியும் என்பதால், பெண்களும் இதில் அதிகம் விளையாடுகிறார்கள். அதிலும் இளம் தலைமுறையினர்தான் ஈடுபடுகிறார்கள். சூதாட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதைவிட, அதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? என்பதை ஆராய வேண்டும். அதுதொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது அவசியமான ஒன்று' என்றார்.

கட்டாயம் தடை செய்ய வேண்டும்

வடுகப்பட்டியை சேர்ந்த வக்கீல் சிவனேசன் கூறும்போது, "ஆன்லைன் சூதாட்டங்கள் கட்டாயம் தடை செய்யப்பட வேண்டியது. அதனால், பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பது என்பது பாதிப்புகளை இன்னும் அதிகரிக்கவே செய்யும். ஆன்லைன் சூதாட்டத்தால் இழந்த நிதியை திரும்ப பெறவும் வழிவகை இல்லை. அந்த அளவுக்கு சூதாட்ட செயலிகளை இயக்கும் நிறுவனங்களில் விதிகள் உள்ளன.

தேனி மாவட்டத்தை சேர்ந்த எனக்கு தெரிந்த நபர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.60 லட்சம் வரை இழந்துள்ளார். பலரிடம் அவர் கடன் வாங்கி சூதாடி இருக்கிறார். தற்போது கடனை செலுத்த முடியாமல் தவிக்கிறார். கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுக்கிறார்கள். சென்னையை சேர்ந்த நண்பர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாயை இழந்துவிட்டு தற்கொலை செய்யும் முடிவோடு பெங்களூரு சென்று விட்டார். பின்னர், அவரை தொடர்புகொண்டு அவர் தற்கொலை முடிவை மாற்ற வைத்தோம். தினமும் பலர் பணத்தை இழக்கின்றனர். இதுபோன்ற ஆன்லைன் சூதாட்ட செயலிகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும். தடை செய்தால் தான் இனிமேல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும்" என்றார்.

ஆசை காட்டி பணம் பறிப்பு

பெருமாள்கவுண்டன்பட்டியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மதன்குமார் கூறும்போது, "ஆன்லைன் சூதாட்டத்தில் இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து வயதினரும் ஈடுபடுகின்றனர். முதலில் ஆர்வத்தை தூண்டி, பின்னர் இவை சூதாட்டத்துக்கு அடிமையாக்குகிறது. என்னதான் சூதாட்டம் என்றாலும், அதுவும் ஒரு வடிவமைக்கப்பட்ட செயலி தான். என்ன வடிவமைக்கப்பட்டதோ அதை தான் வெளிப்படுத்தும்.

பணம் ஜெயிக்க வைப்பது போல் வைத்து, விளையாட்டுக்கு அடிமையாக்கும். பின்னர், இழந்த பணத்தை மீட்க வேண்டும் என்று தொடர்ந்து பணத்தை இழக்க வைக்கிறது. இதுபோன்ற செயலிகள் என்பது மக்களிடம் ஆசைகளை காட்டி, பணத்தை பறிக்கும் கொள்ளை சம்பவத்துக்கு இணையானது. எனவே, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்" என்றார்.

பப்ஜி போன்று தடை

உப்புக்கோட்டையை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் வினோத்குமார் கூறும்போது, "நிதி இழப்பு ஏற்படும் என்று தெரிந்தே பலரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற சூதாட்ட செயலிகளை செல்போனில் பதிவிறக்கம் செய்யக்கூடாது. மாணவ, மாணவிகள் தங்களின் செல்போன்களில் இதுபோன்ற செயலிகள் பதிவிறக்கம் செய்து இருப்பது தெரியவந்தால் பெற்றோர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவற்றை அழித்து விடலாம். அரசு தடை விதிப்பது ஒருபுறம் இருக்கட்டும். மக்கள் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும். பப்ஜி விளையாட்டால் நிறைய பாதிப்புகள் ஏற்பட்டது. உடனே பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டது. தற்போது ஆன்லைன் சூதாட்டத்தாலும் பாதிப்புகள் அதிகம் உள்ளது. அதை தடை செய்ய வேண்டும்" என்றார்.


Related Tags :
Next Story