மடிப்பாக்கத்தில் மாமியாரை கத்தியால் குத்திக்கொன்ற மருமகன்


மடிப்பாக்கத்தில் மாமியாரை கத்தியால் குத்திக்கொன்ற மருமகன்
x

மாமியாரை கத்தியால் குத்திக்கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர். தடுக்க வந்த மைத்துனருக்கும் கத்திக்குத்து விழுந்தது.

சென்னை

எலக்ட்ரீஷியன்

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40). எலக்ட்ரீஷியன். இவருடைய மனைவி கீதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆறுமுகத்துக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்தார். இதனால் கீதா, கணவருடன் கோபித்துக்கொண்டு தனது மகள்களுடன் மடிப்பாக்கம் காஞ்சி காமாட்சி நகரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

மாமியார் கொலை

நேற்று மாமியார் சித்ரா (63) வீட்டுக்கு குடிபோதையில் வந்த ஆறுமுகம், தன்னுடன் மனைவியை குடும்பம் நடத்த அனுப்பி வைக்கும்படி கூறினார். அப்போது வீட்டில் கீதா இல்லை என சித்ரா கூறியதால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், மாமியாருடன் வாக்குவாதம் செய்தார்.

பின்னர் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து மாமியார் சித்ராவின் கழுத்தில் குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த மைத்துனர் உதயகுமார் (34) ஓடிவந்து தடுத்தார். அப்போது அவரது வயிற்றிலும் கத்தியால் குத்தினார். மேலும் ஆறுமுகத்துக்கும் விலா எலும்பில் காயம் ஏற்பட்டது.

கத்திக்குத்தில் காயம் அடைந்த சித்ரா, உதயகுமார் இருவரும் பள்ளிக்கரணையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சித்ரா பரிதாபமாக இறந்தார். இது குறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story