பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனை


பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனை
x
தினத்தந்தி 26 Feb 2023 6:45 PM GMT (Updated: 26 Feb 2023 6:46 PM GMT)

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனை 3-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

ஆன்மிகத்தில் பிரசித்தி பெற்றதும், வரலாற்றில் புகழ் பெற்றதுமான 8 வீரட்டானங்களுள் 2-வது வீரட்டானம் என்ற பெருமை கொண்ட திருக்கோவிலூர் சிவானந்தவல்லி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சாமிகள் வீதி உலா நடைபெற்ற நிலையில், நேற்று காலை திருமஞ்சனமும், சந்திரசேகர் சாமி ஆலயத்தை வலம்வருதல் நிகழ்ச்சியும், இரவு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மேளம் மற்றும் கைலாய வாத்தியங்கள் இசைக்க வாண வேடிக்கையுடன் வெள்ளி ஏழு அடுக்கு விளக்கு தட்டில் தீபாராதனை ஒளிர ராஜ கோலத்தில் சாமியை பக்தர்கள் தரிசனம் செய்து மகிழ்ந்தனர். இதில் திருக்கோவிலூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை தொடர்ந்து வருகிற 3-ந் தேதி மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.


Next Story