தீபாவளி பண்டிகையையொட்டி நாளை முதல் சிறப்பு அரசு பஸ்கள் இயக்கம்


தீபாவளி பண்டிகையையொட்டி நாளை முதல் சிறப்பு அரசு பஸ்கள் இயக்கம்
x

தீபாவளி பண்டிகையையொட்டி கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு அரசு பஸ்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெரம்பலூர்

சிறப்பு பஸ்கள்

தீபாவளி பண்டிகையையொட்டி கும்பகோணம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பொதுமக்கள் எளிதாகவும், எவ்வித சிரமமும் இன்றி பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படவுள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால் வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 23-ந்தேதி வரையிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது.

கோவை, சென்னை

மேலும் திருச்சியில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும், மதுரை, கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்குட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் நாளை முதல் 23-ந்தேதி வரையிலும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர பஸ்களும் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில், தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய ஊர்களுக்கு கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்திலிருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

ஜெயங்கொண்டம் பஸ் நிலையம்

மேலும் தீபாவளி முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல வருகிற 24-ந்தேதி முதல் வருகிற 26-ந்தேதி வரை சிறப்பு அரசு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 23-ந்தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும், அரியலூர் பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய ஊர்களுக்கும், ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்திலிருந்து விருத்தாசலம், கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கும் சிறப்பு அரசு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகை முடித்து அவரவர்கள் வேலைக்கு திரும்புவதற்கும் சிறப்பு அரசு பஸ்கள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story