திராவிட மாடல் ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு பாதுகாப்பு இல்லை; நாகை திருவள்ளுவன் பேட்டி


திராவிட மாடல் ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு பாதுகாப்பு இல்லை; நாகை திருவள்ளுவன் பேட்டி
x

திராவிட மாடல் ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் கூறினார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மேற்கு மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில், பழனி வேல் ரவுண்டானா பகுதியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் தர்மராஜ் தலைமை தாங்கினார். கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது, பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டி பகுதி தூய்மை பணியாளர் அன்னம்மாள் படுகொலையை கண்டித்தும், குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக குளத்துரோட்டின் நடுப்பகுதியில் வந்து தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து நாகை திருவள்ளுவன் நிருபர்களிடம் கூறுகையில், அன்னம்மாளை பாலியல் தொல்லை கொடுத்து படுகொலை செய்துள்ளனர். ஆனால் இந்த வழக்கில் விசாரணை செய்து குற்றவாளிகளை பிடிப்பதில் மாவட்ட நிர்வாகம், போலீசார் மெத்தனபோக்கை கடைபிடிக்கின்றனர். எனவே குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும். திராவிட மாடல் ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே பட்டியல் இன மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.



Related Tags :
Next Story