வீட்டில் பதுக்கி வைத்திருந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்; பெண்கள் உள்பட 7 பேர் கைது


வீட்டில் பதுக்கி வைத்திருந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்; பெண்கள் உள்பட 7 பேர் கைது
x
தினத்தந்தி 29 Jan 2023 6:45 PM GMT (Updated: 29 Jan 2023 6:47 PM GMT)

கூடலூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

கூடலூர் வடக்கு ரத வீதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் வடக்கு ரத வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதா (வயது 24) என்பவரது வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். சோதனையின்போது விற்பனைக்காக 2 கிலோ கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரனையில், அதே பகுதியை சேர்ந்த முருகேஸ்வரி (50), சிவரஞ்சனி (27), ரஞ்சித் குமார் (24) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கூடலூர் 1-வது வார்டு அரசமரத் தெருவை சேர்ந்த பிரபு என்பவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை மொத்தமாக விலைக்கு வாங்கி வந்து விற்பனைக்காக இவர்களிடம் கொடுத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து போலீசாரும் அவரையும், கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்த திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த சபரிமணி (25), காமராஜர் தெருவை சேர்ந்த அருண்பாண்டியன் (26) ஆகியோரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் 6 கிலோ கஞ்சா, மோட்டார்சைக்கிள் மற்றும் ரூ.26 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story