குளத்தில் மூழ்கி மாணவர் பலி


குளத்தில் மூழ்கி மாணவர் பலி
x

குளத்தில் மூழ்கி மாணவர் உயிரிழந்தார்.

திருச்சி

திருவெறும்பூர்:

தண்ணீரில் மூழ்கினார்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு 3 மகன்கள். இதில் மூத்த மகன் விஷ்வா(வயது 17). பிளஸ்-2 முடித்துள்ள இவருக்கு, திருச்சியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்வதற்கு இடம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் விஷ்வாவும், அவரது தம்பிகளான விஷால், கார்த்தியும் சேர்ந்து நேற்று திருநெடுங்குளத்தில் உள்ள தீர்த்தகுளத்தில் தங்களது மாட்டை குளிப்பாட்டுவதற்கு ஓட்டிச்சென்றனர். அப்போது விஷ்வாவும், விஷாலும் குளத்தின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு நீந்தி சென்றுள்ளனர். இதில் விஷ்வா நீந்த முடியாமல் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

பிணமாக மீட்பு

இதனைப் பார்த்த கார்த்திக், விஷால் ஆகியோர் உடனடியாக தங்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து விஜயகுமார் துவாக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துவாக்குடி போலீசார், குளத்தை பார்வையிட்டதோடு, உடனடியாக நவல்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த நவல்பட்டு தீயணைப்புத் துறையினர் குளத்தில் இறங்கி தேடி, விஷ்வாவை பிணமாக மீட்டனர். அவரது உடலை துவாக்குடி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story