டிரைவர் தூக்க கலக்கத்தில் ஓட்டியதால் டேங்கர் லாரி மோதி 2 கார்கள், மோட்டார் சைக்கிள்கள் சேதம்


டிரைவர் தூக்க கலக்கத்தில் ஓட்டியதால் டேங்கர் லாரி மோதி 2 கார்கள், மோட்டார் சைக்கிள்கள் சேதம்
x
சென்னை

பெரம்பூர்,

சென்னை கொடுங்கையூர் எழில் நகர் தொப்பை விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் சுரேஷ்குமார். கார் டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு தனது காரை வீட்டின் முன்புறம் நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார்.

நேற்று அதிகாலை 3 மணியளவில் அந்த வழியாக எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, அங்கு நிறுத்தி இருந்த சுரேஷ்குமார் கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த கார் அருகில் நிறுத்தி இருந்த மற்றொரு கார் மற்றும் 2 மோட்டார்சைக்கிள்கள் மீது மோதி நின்றது.

டேங்கர் லாரி மோதியதில் 2 கார்கள், 2 மோட்டார்சைக்கிள்கள் சேதம் அடைந்தது. இதுபற்றி வியாசர்பாடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து டேங்கர் லாரி டிரைவரான நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த அன்புச்செல்வன் (30) என்பவரிடம் விசாரித்தபோது அவர் அதிகாலையில் தூக்க கலக்கத்தில் லாரியை ஓட்டியபோது கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி விபத்துக்குள்ளானது தெரிந்தது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.


Next Story