தனியார் பஸ்சை சிறைபிடித்த பொதுமக்களால் பரபரப்பு


தனியார் பஸ்சை சிறைபிடித்த பொதுமக்களால் பரபரப்பு
x

தனியார் பஸ்சை சிறைபிடித்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை வழியாக மணப்பாறைக்கு தினசரி அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கி வருகின்றன. அவ்வாறு செல்லும் பஸ்கள் அனைத்தும் விராலிமலை புதிய பஸ் நிலையத்திற்கு சென்று விட்டு அதன் பிறகு மணப்பாறைக்கு செல்லும். ஆனால் ஒரு சில பஸ்களை தவிர மற்ற பஸ்கள் அனைத்தும் புதிய பஸ் நிலையத்திற்குள் செல்லாமல் விராலிமலை சோதனைச்சாவடி வழியாகவே சென்று விடுகின்றன. இதனால் அவ்வப்போது பயணிகளுக்கும், பஸ் டிரைவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை வழியாக மணப்பாறைக்கு வந்த ஒரு தனியார் பஸ்சில் புதுக்கோட்டையிலிருந்து விராலிமலைக்கு பயணித்த பயணிகளில் ஒருவர் புதிய பஸ் நிலையத்திற்கு கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். ஆனால் அந்த பயணியிடம் கண்டக்டர் புதிய பஸ் நிலையம் செல்லாது, வேண்டுமென்றால் விராலிமலை சோதனைச்சாவடி நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பஸ்சானது விராலிமலை சோதனைச்சாவடி நிறுத்தத்தை வந்தடைந்தது. இதனையடுத்து அங்கு இறங்கிய அவர், டிரைவரிடம் சென்று ஏன் புதிய பஸ் நிலையத்திற்கு செல்லாது என வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது டிரைவர் சரிவர பதில் கூறாமல் பஸ்சை இயக்கியதை கண்ட சக பயணிகள் மற்றும் அங்கிருந்தவர்கள் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பஸ்சை சிறைபிடித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் நிலைமையை புரிந்து கொண்ட டிரைவர் மற்றும் கண்டக்டர் இனிமேல் புதிய பஸ் நிலையம் சென்று விட்டு அதன் பிறகு மணப்பாறைக்கு செல்கிறோம் என கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் அந்த தனியார் பஸ் புதிய பஸ் நிலையம் சென்று விட்டு மணப்பாறைக்கு சென்றது.


Next Story