பெங்களூருவில் இருந்து தர்மபுரிக்குபஸ்சில் கொண்டு வந்த 12 கிலோ வெள்ளி திருட்டு
பெங்களூருவில் இருந்து தர்மபுரிக்கு பஸ்சில் கொண்டு வரப்பட்ட 12 கிலோ வெள்ளி திருடப்பட்டது தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளி திருட்டு
பெங்களூரு வி.வி.புரம் பகுதியை சேர்ந்தவர் சோமசேகர் (வயது 44). இவர் வெள்ளியை வாங்கி கடைகளுக்கு விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் சோமசேகர் பெங்களூருவில் இருந்து தர்மபுரிக்கு பஸ்சில் 25 கிலோ வெள்ளியை கொண்டு வந்தார். தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய அவர் சரிபார்த்தபோது அதில் 12 கிலோ வெள்ளி திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
போலீசார் வழக்குப்பதிவு
சோமசேகர் பஸ்சில் வெள்ளி பொருட்களை கொண்டு வருவதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து வெள்ளி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.