மரத்தில் வேன் மோதல்; 18 பேர் காயம்


மரத்தில் வேன் மோதல்; 18 பேர் காயம்
x

விருத்தாசலம் அருகே மரத்தில் வேன் மோதிய விபத்தில் 18 பேர் காயமடைந்தனர். நண்பரின் திருமணத்திற்கு வந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கடலூர்

விருத்தாசலம்,

தனியார் நிறுவன ஊழியர்கள்

கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஹரி (வயது 25), ஜான்பால் (30), விஜய் (31), வீரக்குமார் (24), ராஜ்குமார் (26), லட்சுமணன் (48), ஆல்வின் ஜோசப் (39), சந்தோஷ் பாபு (21) உள்ளிட்ட 17 பேர் வேலை செய்து வருகிறார்கள்.

இதே நிறுவனத்தில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை சேர்ந்த 25 வயதுடைய வாலிபரும் பணிபுரிந்து வருகிறார். இவரது திருமணம் நேற்று நடந்தது. இந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக ஹரி உள்பட 17 பேர் கோவையில் இருந்து நேற்று முன்தினம் இரவு சேத்தியாத்தோப்புக்கு புறப்பட்டனர்.

18 பேர் காயம்

இந்த வேனை திருப்பூரை சேர்ந்த தங்கவேல் மகன் தினேஷ்(வயது 22) என்பவர் ஓட்டினார். நேற்று அதிகாலை 5 மணிக்கு விருத்தாசலம் அருகே கோ.மங்கலத்தில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி, சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் வேனின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் டிரைவர் தினேஷ், ஹரி உள்பட 18 பேரும் காயமடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story