100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து பெண் பலி


100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து பெண் பலி
x

பழனி அருகே, கொடைக்கானல் மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெண் பலியானார். டிரைவர் உள்பட 21 பேர் காயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

கொடைக்கானலுக்கு சுற்றுலா

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த 22 பேர் நேற்று முன்தினம் கொடைக்கானலுக்கு ஒரு வேனில் சுற்றுலா வந்தனர். கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களை கண்டுகளித்த அவர்கள் பழனிக்கு செல்ல முடிவு செய்தனர்.

இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு கொடைக்கானல்-பழனி மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தனர். மன்னார்குடியை சேர்ந்த இளம்பரிதி (வயது 25) என்பவர் வேனை ஓட்டினார்.

சவரிக்காடு அருகே 7-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடியது.

100 அடி பள்ளத்துக்குள்...

ஒரு கட்டத்தில் சாலையோரத்தில் உள்ள 100 அடி பள்ளத்துக்குள் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் டிரைவர் இளம்பரிதி, மன்னார்குடி வ.உ.சி.ரோடு பகுதியை சேர்ந்த கவுரி (18), தன்சிகா (4), திவ்யா (29), வசந்தா (70), முகேஸ்வரன் (15), காயத்ரி (21), பாரதி செல்வன் (15), சங்கவி (26), தஞ்சாவூரை அடுத்த மடிகை பகுதியை சேர்ந்த மாரியம்மாள் (45) உள்பட 22 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர். அய்யோ, அம்மா என்று அவர்கள் அலறினர்.

அந்த சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் பழனி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பெண் பரிதாப சாவு

பின்னர் கயிறு கட்டி பள்ளத்தில் இறங்கி, காயமடைந்தவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் (45) பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story