ஒடிசாவில் இருந்து ஈரோட்டுக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கம்


ஒடிசாவில் இருந்து ஈரோட்டுக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கம்
x
தினத்தந்தி 28 Jun 2023 9:51 PM GMT (Updated: 29 Jun 2023 11:15 AM GMT)

ஒடிசாவில் இருந்து ஈரோட்டுக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சேலம்

சூரமங்கலம்:

ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முக்கிய வழித்தடங்களில் ெரயில்வே நிர்வாகம் அவ்வப்போது சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒடிசா மாநிலம் சாம்பல்பூரில் இருந்து சேலம் வழியாக ஈரோட்டிற்கு சிறப்பு ரெயில் இயக்குகிறது. அதன்படி சாம்பல்பூர் - ஈரோடு வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 08311) அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை புதன்கிழமைகளில் சாம்பல்பூரில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு நெல்லூர், கூடூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக வியாழக்கிழமை மாலை 6.42 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 6.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு ஈரோடு சென்றடையும்.

இதேபோல் மறு மார்க்கத்தில் ஈரோடு - சாம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 08312) அடுத்த ஜூலை மாதம் 7-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1.45 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு மதியம் 2.47 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 2.50 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர், நெல்லூர் வழியாக சனிக்கிழமை இரவு 9.15 மணிக்கு சாம்பல்பூர் சென்றடையும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story