வெல்டருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை


வெல்டருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
x

வெல்டருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அரியலூர்

மாணவியுடன் காதல்

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சன்னாசிநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 34). வெல்டர். இவர், கடந்த 2021-ம் ஆண்டு ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்த 14 வயதுடைய மாணவியை காதலிப்பதாக கூறி, அவருடன் பழகியுள்ளார். மேலும் அவர்கள் செல்போனில் அடிக்கடி பேசி வந்தனர். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 15.7.2021 அன்று அந்த மாணவியை மணிகண்டன் அழைத்து சென்று, அவருடன் ஒன்றாக இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் 17.7.2021 அன்று அரியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் சிறுமியை கடத்தியது மற்றும் போக்சோ சட்டத்தில் அரியலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர்.

20 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி ஆனந்தன் தீர்ப்பு கூறினார். அதில் மணிகண்டனுக்கு சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் மாணவியின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் இழப்பீடு தொகையை அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ராஜா ஆஜராகி வாதாடினார்.


Next Story