மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 102 பேருக்கு நலத்திட்ட உதவி
மரூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 102 பேருக்கு நலத்திட்ட உதவி
ரிஷிவந்தியம்
சங்கராபுரம் தாலுகா மரூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அலுவலர் ராஜவேல் தலைமை தாங்கினார். சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சத்யநாராயணன், ரிஷிவந்தியம் ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமிசுப்பிரமணியன், துணை தலைவர் செல்லம்மாள் அண்ணாதுரை, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாரதிதாசன், துரைமுருகன், சமூகபாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சத்தியநாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து பட்டாமாற்றம், முதியோர் உதவித்தொகை, பசுமை வீடு, சலவை பெட்டி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 131 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 17 மனுக்களுக்கு உடனடி தீர்வுகாணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. தொடர்ந்து 102 பயனாளிகளுக்கு பட்டாமாற்றம், புதிய ரேசன்கார்டு, முதியோர் உதவித்தொகை, வேளாண் கருவி மற்றும் இடுபொருட்கள், விதைபொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டன. இதில் மண்டல துணை தாசில்தார் ராமமூர்த்தி, தேர்தல் துணை தாசில்தார் பசுபதி, வட்ட வழங்கல் அலுவலர் கமலகண்ணன், வருவாய் ஆய்வாளர் இளையராஜா, வேளாண் அலுவலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் நன்றி கூறினார்.