பள்ளி-கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?


பள்ளி-கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?
x

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என்பது பற்றி தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என்பது பற்றி தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மாணவியின் தந்தை மீது தாக்குதல்

மதுரையைச் சேர்ந்த விக்டோரியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறேன். கடந்த 3-ந் தேதி அன்று சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

அந்த வீடியோவில், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி வழியே தத்தனேரி மயானத்திற்கு சென்ற சவ ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர்கள் மது அருந்திவிட்டு, கூச்சலிட்டும் மாணவிகளை அச்சுறுத்தியும், அதை தட்டிக்கேட்ட மாணவியின் தந்தையை அடித்து தாக்கி, அங்கிருந்த மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினர். மாணவிகள் அனைவரும் கல்லூரி முடிந்து வெளியே வரும்போது நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தை பார்த்து பயந்துபோய் மீண்டும் கல்லூரிக்குள் சென்று விட்டனர். இது தொடர்பாக மதுரை செல்லூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் அராஜகம்

அதே போல் கடந்த 30-ந் தேதி மதுரை சொக்கிக்குளத்தில் உள்ள மகளிர் கல்லூரிக்குள், எந்தவித முன் அனுமதியின்றியும், மோட்டார் சைக்கிள்களில் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள், அங்கிருந்த காவலாளிகளை தாக்கியதுடன் மாணவிகளை ஆபாச வார்த்தைகளில் திட்டி அராஜகத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மதுரை கே.புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிலரை கைது செய்தனர்.

எனவே பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்து, பெண்களின் பாதுகாப்பிற்காக 'நிர்பயா நிதி' என்ற பெயரில் குறிப்பிட்ட தொகையை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

எனவே அந்த நிதியின் கீழ் தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நுழைவு வாசலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

பாதுகாப்பு முக்கியம்

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் பினேகாஸ் ஆஜராகி, பெண்களுக்கும், மாணவிகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் அதற்கு போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.

அப்போது அரசு வக்கீல்கள் ஆஜராகி, சம்பந்தப்பட்ட மகளிர் கல்லூரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றனர்.

அரசுக்கு நோட்டீஸ்

இதையடுத்து நீதிபதிகள், குழந்தைகள், பெண்கள், மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை என்றனர்.

பின்னர் இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.


Related Tags :
Next Story