கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை


கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை
x

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

கடலூர்

தமிழக பகுதிகளின் மேற்கு திசை காற்று மாறுபாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வட கடலோர பகுதிகள், டெல்டா பகுதிகள், கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அதன்படி கடலூரில் நேற்று இரவு கனமழை பெய்தது. இரவு 9.30 மணிக்கு தொடங்கிய மழை இரவு 11 மணி வரை பெய்தது. இடி, மின்னலுடன் கனமழை கொட்டியதால், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானம், மஞ்சக்குப்பம் மைதானம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது.

விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்கியதால் மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டனர். மழையின் காரணமாக கடலூர் மஞ்சக்குப்பம், புதுப்பாளையம், திருப்பாதிரிப்புலியூர் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டு, பிறகு சரியானது. இருப்பினும் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், லால்பேட்டை, சேத்தியாத்தோப்பு, விருத்தாசலம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். வயல்களில் இருந்து தண்ணீரை வடிய வைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 45.9 மில்லி மீட்டர் மழை பதிவானது. குறைந்தபட்சமாக பண்ருட்டியில் 1.2 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 13.34 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

கலெக்டர் அலுவலகம் - 45.8

புவனகிரி - 42

காட்டுமன்னார்கோவில் - 38.2

லால்பேட்டை -37

காட்டுமயிலூர் - 27

ஸ்ரீமுஷ்ணம் - 19.2

வேப்பூர் -16

சிதம்பரம் - 13.2

குடிதாங்கி -12.5

அண்ணாமலைநகர் - 9.6

சேத்தியாத்தோப்பு - 5.8

விருத்தாசலம் - 5

பரங்கிப்பேட்டை - 4.2

குறிஞ்சிப்பாடி - 4

கொத்தவாச்சேரி - 4

வானமாதேவி -3


Related Tags :
Next Story