இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அடுத்த மாதம் 25-ந் தேதி தேர்தல்


இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அடுத்த மாதம் 25-ந் தேதி தேர்தல்
x
தினத்தந்தி 2 March 2020 4:51 PM GMT (Updated: 2 March 2020 11:38 PM GMT)

இன்னும் 6 மாதங்கள் பதவிக்காலம் இருக்கும் நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று அதிரடியாக கலைத்தார். அங்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுகிறது.

கொழும்பு,

இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் அதிபரும், தனது சகோதரருமான மகிந்த ராஜபக்சேவை அவர் நியமித்தார்.

கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றவுடனே, இலங்கை நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4½ ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்யும் வரை கலைக்க முடியாது என்பதால், இந்த நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நேற்று முன்தினம் 4½ ஆண்டுகளை எட்டியது. இதையொட்டி நாடாளுமன்ற கலைப்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இதை பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக கடந்த 29-ந் தேதி அவர் கூறுகையில், ‘இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் அனுமதிக்காததால், அரசுக்கு வேறு வழி தெரியவில்லை. எனவே அதிபர் தனது அரசியல்சாசன அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தை கலைப்பார்’ என தெரிவித்தார்.

அதன்படி இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். இதற்கான ஆணையில் நேற்று இரவு அவர் கையெழுத்து போட்டார்.

அத்துடன் புதிய தேர்தலுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அதன்படி இலங்கையில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 25-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 12 முதல் 19-ந் தேதி வரை நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 3-ல் 2 பங்கு இடங்களை பெற விரும்புவதாக பிரதமர் மகிந்த ராஜபக்சே சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story