அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை மோசமான வார்த்தையால் திட்டிய டொனால்டு டிரம்ப்


அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை மோசமான வார்த்தையால் திட்டிய டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 12 Jan 2018 11:04 AM GMT (Updated: 12 Jan 2018 11:04 AM GMT)

அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை மோசமான வார்த்தைகளால் டொனால்டு டிரம்ப் திட்டிஉள்ளார். #Trump #Haiti #Africa #WhiteHouse

வாஷிங்டன்,

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது தனது தேர்தல் பிரசாரத்தின்போது குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்ப் வெளியிட்ட முக்கிய கோஷம், “அமெரிக்க பொருட்களையே வாங்குவோம், அமெரிக்கர்களையே வேலைகளில் அமர்த்துவோம்” என்பதாகும். இதற்கான நடவடிக்கையிலும் டொனால்டு டிரம்ப் ஈடுபட்டு உள்ளார் என்பது அனைவரும் அறிந்தது. டொனால்டு டிரம்ப் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்றும் விவகாரத்திலும் முன்னுரிமை கொடுத்துதான் செயல்பட்டு வருகிறார். 

இந்நிலையில் அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை மிகவும் மோசமான வார்த்தைகளால் டொனால்டு டிரம் திட்டிஉள்ளார். 

வெள்ளை மாளிகையில் அதிபரின் ஓவல் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த டொனால்டு டிரம்ப், "இந்த ****** நாடுகளில் இருந்து இங்கு வந்துள்ளவர்களை நாம் ஏன் வைத்திருக்கிறோம்?" என்று பேசிஉள்ளார் என வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நியூயார்க் டைம்ஸ் மற்றும் பிற அமெரிக்க ஊடகங்கள் டொனால்டு டிரம்ப் மோசமான வார்த்தையால் பேசினார் என்பதை உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டு உள்ளது. ஹைத்தி, எல் சால்வடோர் மற்றும் ஆஃப்பிரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களை குறிப்பிட்டு டொனால்டு டிரம்ப் இப்படி பேசிஉள்ளார் என செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க மற்றும் வெளிநாட்டவர் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்,  குடியேற்ற உடன்படிக்கை ஒன்றை இறுதி செய்வதற்காக டிரம்பை சந்தித்த போது இச்சம்பவம் நேரிட்டு உள்ளது.

 “ஹைத்தி நாட்டவர்களை இங்கே நாம் ஏன் வைத்திருக்க வேண்டும்?” என கேள்வியை எழுப்பிஉள்ளார் டொனால்டு டிரம்ப். 

அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ராஜ் ஷா வெளியிட்டு உள்ள அறிக்கையில், "சில வாஷிங்டன் அரசியல்வாதிகள் பிற நாடுகளுக்காக போராட விரும்புகிறார்கள். ஆனால், அதிபர் டிரம்ப் எப்போதுமே அமெரிக்க மக்களுக்காகத்தான் போராடுவார்," என்று குறிப்பிட்டு உள்ளார். டொனால்டு டிரம்ப் பேச்சுக்கு வெள்ளை மாளிகை தரப்பில் விளக்கம், மறுப்பு தெரிவிக்கப்படவில்லை. 

எல் சால்வடோர் நாட்டை சேர்ந்த சுமார் 2,00,000 பேருக்கு அமெரிக்காவில் வசிக்க மற்றும் பணியாற்ற வழங்கப்பட்ட தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை அமெரிக்கா இந்த வாரம் ரத்து செய்தது. இதுபோன்று ஹைத்தி மற்றும் நிகரகுவா நாடுகளை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட அந்த அந்தஸ்து ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. டொனால்டு டிரம்பின் மோசமான பேச்சுக்கு அந்நாட்டு எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். 

Next Story