மும்பை தாக்குதல் விவகாரத்தில் நவாஸ் செரீப் கருத்து தவறாக பரப்பப்படுகிறது - பாகிஸ்தான் பிரதமர்
மும்பை தாக்குதல் விவகாரத்தில் நவாஸ் செரீப் கருத்து தவறாக பரப்பப்படுகிறது என பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி கூறிஉள்ளார். #MumbaiAttack #NawazSharif
இஸ்லாமாபாத்,
மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சமீபத்தில் டான் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டு வருகிறது. அவர்களை போராளிகள் என்று அழைக்கும் நாம், எல்லை தாண்டிச் சென்று மும்பையில் 150-க்கும் மேற்பட்டவர்களை கொல்ல அனுமதிக்க வேண்டுமா? இதற்கான விளக்கத்தை எனக்கு அளியுங்கள். இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்னும் ஏன் முடிக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார். நவாஸ் செரீப் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் அவருக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது. நவாஸ் செரீப் பேச்சு இந்தியாவின் குற்றச்சாட்டை உறுதி செய்து உள்ளது.
பாகிஸ்தான் மீடியாக்களும் உலக அளவில் பாகிஸ்தானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என நவாஸ் செரீப் மீது பாய்ந்து உள்ளது.
நவாஸ் செரீப்பின் ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும் அவருடைய கருத்தை நிராகரித்தது.
இதற்கிடையே தெரிவித்த கருத்துக்களுக்காக நவாஸ் ஷெரிப் மீது தேசத் துரோக வழக்குத் தொடரக்கோரி லாகூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக தேசிய பாதுகாப்புக்கு குழு கூட்டம் நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் நவாஸ் செரீப்பின் கருத்து "தவறானவை” என கண்டனத்தை பதிவு செய்து உள்ளது. இதற்கிடையே நவாஸ் செரீப்பிடம், அந்நாட்டு பிரதமர் அப்பாஸி பேசிஉள்ளார். அப்பாஸி பேசுகையில், மும்பை தாக்குதல் விவகாரம் தொடர்பாக நவாஸ் செரீப்பிடம் பேசினேன், அவர் தன்னுடைய பேச்சு என மீடியாக்களில் வெளியாகிய தகவல்கள் சரியானது கிடையாது, தவறாக செய்தி பரப்பப்பட்டு உள்ளது,” என கூறினார். தவறான தகவலுக்கு இந்திய மீடியாக்கள் அதிகமாக கவனம் செலுத்துகிறது, இது பாதிக்காது எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story