ரஷியாவில், சிலிண்டர் வெடித்து அடுக்குமாடி கட்டிடம் தரைமட்டம்: 35 மணி நேரத்துக்கு பிறகு பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு


ரஷியாவில், சிலிண்டர் வெடித்து அடுக்குமாடி கட்டிடம் தரைமட்டம்: 35 மணி நேரத்துக்கு பிறகு பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 2 Jan 2019 11:45 PM GMT (Updated: 2 Jan 2019 10:41 PM GMT)

ரஷியாவில், கியாஸ் சிலிண்டர் வெடித்து அடுக்குமாடி கட்டிடம் தரைமட்டமானதில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. 35 மணி நேரத்துக்கு பிறகு பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.

மாஸ்கோ, 

ரஷியாவின் உரால் பிராந்தியத்துக்கு உட்பட்ட மக்னிடோகோரஸ்க் நகரத்தில் 10 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

கடந்த திங்கட்கிழமை காலையில் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் உள்ள கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி முழுவதுமாக இடிந்து விழுந்து தரைமட்டமானது. பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானவர் கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

அதனை தொடர்ந்து போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த முதல் நாள் கட்டிட இடிபாடுகளில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டன.

6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டோரை மீட்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்தன.

இருந்த போதிலும் ஒரு குழந்தை உள்பட 17 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. இதன் மூலம் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.

அதே சமயம் விபத்து நடந்து சுமார் 35 மணி நேரத்துக்கு பிறகு 11 மாத பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. இது மீட்பு குழுவினர் உள்பட அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இடிபாடுகளுக்கு இடையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டதை தொடர்ந்து, விரைந்து செயல்பட்ட மீட்பு குழுவினர் கடுமையான போராட்டத்துக்கு பிறகு அந்த ஆண் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

சுமார் 35 மணி நேரம் இடிபாடுகளுக்கு இடையிலும், கடும் குளிரிலும் அவதிப்பட்டபோதும் அந்த குழந்தை சுயநினைவோடு இருந்தது.

எனினும் அந்த குழந்தையின் உடலில் அதிக காயங்கள் இருந்தன. எனவே அந்த குழந்தை உயர் சிகிச்சைக்காக விமானம் மூலம் தலைநகர் மாஸ்கோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த குழந்தையின் தாயும், அவரின் 3 வயது குழந்தையும் ஏற்கனவே மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கட்டிட இடிபாடுகளுக்குள் இன்னும் சுமார் 25 பேர் சிக்கி இருப்பார்கள் என தெரிகிறது. அவர்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனினும் மீட்பு குழுவினர் முழு நம்பிக்கை உடன் மீட்பு பணியை தொடர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மக்னிடோகோரஸ்க் நகரத்தில் நேற்று கியாஸ் சிலிண்டர் வெடித்து மற்றொரு விபத்து நேரிட்டது. மினி பஸ்சில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்து எரிந்தது.

இதில் அந்த மினி பஸ்சில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர்.


Next Story