பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்வதை தவிர்க்குமாறு தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்


பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்வதை தவிர்க்குமாறு தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Feb 2019 7:46 AM GMT (Updated: 14 Feb 2019 7:46 AM GMT)

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்வதை தவிர்க்குமாறு தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

வாஷிங்டன்,

பாகிஸ்தான் செல்லும் தங்கள் நாட்டு பயணிகள் பயண திட்டத்தை மறு பரிசீலனை செய்யுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள பயண அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாத அச்சுறுத்தல் நீடிப்பதால், பாகிஸ்தான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் விமான சேவையை இயக்குவதிலும் அச்சுறுத்தல் இருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், “ பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால், பாகிஸ்தான் செல்லும் அமெரிக்கர்கள் தங்கள் பயண திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். பலோசிஸ்தான் மாகாணம், கைபர் பக்துன்க்வா மாகாணம், மத்திய கூட்டாட்சி பழங்குடியின பகுதிகள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்  ஆகிய இடங்களுக்கு அமெரிக்கர்கள் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து சதித்திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. பயண முனையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், ராணுவ மையங்கள், விமான நிலையங்கள், பல்கலைக்கழங்கள், சுற்றுலா இடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், அரசு உதவி மையங்கள் ஆகியவற்றில் பயங்கரவாதிகள் சிறிய அளவிலோ அல்லது முன் எச்சரிக்கை எதுவும் இன்றியோ தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது. 

பாகிஸ்தானில் பல இடங்களில் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.  இந்தியா- பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் இருநாடுகளும் தங்கள் நாட்டு ராணுவத்தை குவித்து வைத்து உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் நாட்டைச்சேராத குடிமக்கள், அட்டாரி, வாகா பகுதிகள் வழியாக மட்டுமே எல்லைகளை கடக்க வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story