கலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி; 3 பேர் காயம்


கலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு:  ஒருவர் பலி; 3 பேர் காயம்
x
தினத்தந்தி 28 April 2019 1:14 AM GMT (Updated: 28 April 2019 1:14 AM GMT)

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் பலியாகி உள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் போவே நகரில் யூதமத கோவில் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார்.  இதில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.  அவர்கள் பேலிமர் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் உயிரிழந்து விட்டார்.  காயமடைந்தவர்களில் இளம்பெண் ஒருவரும் மற்றும் 2 ஆண்களும் அடங்குவர்.  இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர் ஜான் எர்னஸ்ட் (வயது 19) என அடையாளம் தெரிந்துள்ளது.

கடந்த மாதம் மசூதியில் நடந்த தாக்குதலில் இந்த நபருக்கு உள்ள தொடர்பு பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  எர்னஸ்ட் ஏ.ஆர். 15 ரக துப்பாக்கியை பயன்படுத்தி உள்ளது தெரிய வந்துள்ளது.  அமெரிக்காவில் நடந்துள்ள பல துப்பாக்கி சூடு சம்பவங்களில் இந்த ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

கடந்த 6 மாதங்களுக்கு முன் பிட்ஸ்பர்க் நகரில் இதேபோன்று யூதமத கோவில் ஒன்றில் நடந்த தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.  அமெரிக்காவில் யூத சமூக வரலாற்றில் நடந்த மிக கொடுமையான தாக்குதல் இதுவாகும்.

Next Story