சவுதி விமான நிலையம் மீது ஆளில்லா விமான தாக்குதல் : ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை


சவுதி விமான நிலையம் மீது ஆளில்லா விமான தாக்குதல் : ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 21 May 2019 11:15 PM GMT (Updated: 21 May 2019 6:57 PM GMT)

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2015–ம் ஆண்டில் தொடங்கிய உள்நாட்டுப்போர் இன்னும் நீடித்து வருகிறது.

சனா, 

அதிபர் ஆதரவு படைகளுக்கு ஆதரவாக சவுதி அரேபிய கூட்டுப்படைகள் களம் இறங்கி உள்ளன. இதன் காரணமாக சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். 

அவ்வப்போது சவுதி அரேபியாவை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்துவதும் உண்டு.

இந்த நிலையில், சவுதி அரேபியாவின் எல்லையோர நகரமான நஜ்ரன் விமான நிலையத்தில் உள்ள ஆயுதக்கிடங்கை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தினர்.

‘காசிப்–கே 2’ ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அந்த ஆயுதக்கிடங்கில் தீப்பிடித்து எரிந்தது.

இதை அல் மசிராஹ் டி.வி. சேனல் அறிவித்தது.

இதற்கு மத்தியில் சவுதி கூட்டுப்படைகளின் செய்தி தொடர்பாளர் கர்னல் துர்கி அரர் மாலேகி, ‘‘நஜ்ரனில் உள்ள ஆயுதக்கிடங்கை குறிவைத்து ஆளில்லா விமான தாக்குதல் நடைபெற்றது’’ என அல் அரேபியா டி.வி. சேனலில் உறுதி செய்தார்.

மேலும், சர்வதேச மனிதாபிமான சட்டத்துக்கு இணங்க, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கை இருக்கும் என துர்கி அரர் மாலேகி தெரிவித்தார்.

ஆனால் ஆளில்லா விமான தாக்குதலில் உயிர்ப்பலி ஏதும் உண்டா என அவர் தெரிவிக்கவில்லை.

தங்கள் நாட்டின் ஜெட்டா மற்றும் டாயிப் நகரங்களை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகள் வழிமறித்து தாக்கப்பட்டன என சவுதி அரேபியா நேற்று முன்தினம் கூறிய நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.


Next Story