எகிப்து முன்னாள் அதிபர் கோர்ட்டில் மயங்கி விழுந்து சாவு


எகிப்து முன்னாள் அதிபர் கோர்ட்டில் மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 18 Jun 2019 12:53 AM GMT (Updated: 18 Jun 2019 8:27 PM GMT)

எகிப்து முன்னாள் அதிபர் கோர்ட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

கெய்ரோ,

எகிப்தில் நீண்டகாலமாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த அதிபர் ஹோஸ்னி முபாரக், பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2012-ம் ஆண்டில் முதல் முறையாக ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த முகமது மோர்சி அதிபரானார்.

ஆனால் ஒரு ஆண்டுக்குள்ளாக முகமது மோர்சிக்கு எதிராக போராட்டம் வெடித்தது. எதிர்க்கட்சியினருடன் இணைந்து மக்கள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதனை தொடர்ந்து, அப்போதைய ராணுவ மந்திரி அப்தல் பத்தா அல் சிசி தலைமையிலான ராணுவம், மோர்சியை பதவியை விட்டு நீக்கியதுடன், அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.

போராட்டத்தில் ஈடுபட்டோரை கொல்வதற்கு உத்தரவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், முகமது மோர்சிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு, பின்னர் 20 ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கும், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. இதற்காக மோர்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது திடீரென அவர் கோர்ட்டிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

முகமது மோர்சியின் மரணம் இயற்கையான மரணம் அல்ல, முழுமையான திட்டமிட்ட கொலை என்று முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த ஒரு ஆண்டாக முகமது மோர்சிக்கு உயர்ரத்த அழுத்தம், நீரழிவு நோய் போன்றவை இருந்தும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காமல் திட்டம்போட்டு சிறிது சிறிதாக அவரை கொலை செய்துவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.


Next Story