காஷ்மீர் விவகாரம் குறித்து சவூதி அரேபிய பட்டத்து இளவரசருடன் பாக்.பிரதமர் பேச்சு


காஷ்மீர் விவகாரம் குறித்து சவூதி அரேபிய பட்டத்து இளவரசருடன் பாக்.பிரதமர் பேச்சு
x
தினத்தந்தி 7 Aug 2019 1:44 PM GMT (Updated: 7 Aug 2019 1:44 PM GMT)

காஷ்மீர் விவகாரம் குறித்து சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார்.

இஸ்லாமாபாத்,

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும், மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்தது.   காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில், ஐநா தலையிட வேண்டும் என்றும் பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது.

காஷ்மீர் இந்தியாவின் பகுதி என்பதை ஏற்க மறுத்து வரும் பாகிஸ்தான் இதற்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவை கோரப்போவதாக தெரிவித்து இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக துருக்கி, மலேசிய அதிபர்களிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசி இருந்தார்.

இந்த நிலையில், சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுடன் தொலைபேசியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் தற்போது நிலவும் சூழல் குறித்து இருவரும் ஆலோசித்ததாக சவூதி அரேபிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தானும், சவூதி அரேபியாவும் நெருங்கிய நட்பு நாடுகளாக விளங்குகின்றன.  கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு பெருமளவு நிதியை சவூதி அரேபியா வழங்கியது நினைவிருக்கலாம். 

Next Story