நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலன்களில் 60 சதவீதம் மட்டுமே வெற்றிகரமாக அமைந்துள்ளன: நாசா


நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலன்களில் 60 சதவீதம் மட்டுமே வெற்றிகரமாக அமைந்துள்ளன: நாசா
x
தினத்தந்தி 7 Sep 2019 2:13 PM GMT (Updated: 7 Sep 2019 2:13 PM GMT)

கடந்த 60 ஆண்டுகளில் நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலன்களில் 60 சதவீதம் மட்டுமே வெற்றிகரமாக அமைந்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் -2 விண்கலம் , சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. குறிப்பிட்ட தூரம் சென்றதும் ராக்கெட்டில் இருந்து பிரிந்த சந்திரயான்-2 விண்கலம் பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வந்தது. அவ்வப்போது அதன் சுற்றுவட்ட பாதை மாற்றி அமைக்கப்பட்டு கடந்த மாதம் 20-ந் தேதி விண்கலம், நிலவின் சுற்று வட்ட பாதைக்குள் கொண்டு செல்லப்பட்டது.

 அதன்பிறகு கடந்த 2-ந் தேதி 1,471 கிலோ எடை கொண்ட விக்ரம் லேண்டர் ஆர்பிட்டரில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது. விக்ரம் லேண்டர் இன்று அதிகாலை நிலவில் தரையிறக்க திட்டமிடப்பட்டு இருந்தது. சாஃப்ட் லேண்டிங் முறையில், நிலவின் தென் துருவத்தில் லேண்டரை இறக்க இஸ்ரோ திட்டமிட்டு இருந்த நிலையில்,  நிலவின் மேற்பரப்பில் சுமார் 2.1 கி.மீட்டர் தொலைவில், கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை விக்ரம் லேண்டர் இழந்தது.  

சந்திரயான் 2 லேண்டர் தொடர்பை இழந்த போதிலும், பல தரப்புகளிலிருந்தும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் பெரு முயற்சிகளை பலதரப்பினரும் பாராட்டி வருகின்றனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிற துறையைச் சார்ந்த பிரபலங்களும் பலதரப்புகளிலிருந்தும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குத் தங்கள் ஆதரவைத் தந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 60 ஆண்டுகளில்  நிலவுக்கு  109 விண்கலன்கள் அனுப்பட்டதாகவும் அவற்றில் 61 மட்டுமே வெற்றி பெற்றுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.   அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா கூறியிருப்பதாவது, “கடந்த ஏப்ரல் மாதம், இஸ்ரேல் அனுப்பிய 
பேரேஷீட் 
 என்ற விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து நிலவில் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியது. 

 1958  முதல் 2019 வரை இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா ஜப்பான், ஐரோப்பிய யூனியன், சீனா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் பலவகையான விண்கலன்களை நிலவுக்கு ஏவியிருக்கின்றன. 1958 ஆம் ஆண்டு  முதல் முறையாக நிலவுக்கு  விண்கலனை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டது. எனினும்,  இது வெற்றிகரமாக அமையவில்லை. 1959 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி முதல் முறையாக நிலவை ஆய்வு செய்ய லுனா 1 என்ற விண்கலம் ரஷ்யாவால் வெற்றிகரமாக அனுப்பப்பட்டது. 

ஆகஸ்ட் 1958 முதல் நவம்பர் 1959 வரையிலான ஒரு ஆண்டு கால இடைவெளியில், அமெரிக்காவும் சோவியத் யூனியன் ரஷ்யாவும் (தற்போது ரஷ்யா) 14 விண்கலன்களை நிலவுக்கு ஏவின. இவற்றில் லுனா 1, லுனா 2, லுனா 3 ஆகிய மூன்று விண்கலன்கள் மட்டுமே  வெற்றி பெற்றன. இவை அனைத்துமே ரஷ்யா ஏவியது.  1964 ஆம் ஆண்டு அமெரிக்கா அனுப்பிய ரேஞ்சர் 7 என்ற விண்கலம் மட்டுமே நிலவை நெருக்கமாக படம் பிடித்து அனுப்பியது.  

ஜப்பான், ஐரோப்பிய யூனியன், சீனா, இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாமதமாகவே இந்தப் பட்டியலில் இணைந்தது. இந்த தகவலை நாசா தெரிவித்துள்ளது.  கடந்த  60 ஆண்டுகளில்  நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலன்களில் 60 சதவீதம் மட்டுமே வெற்றிகரமாக அமைந்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. 

Next Story