ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை; பலி எண்ணிக்கை 93 ஆக உயர்வு
ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதில் பலியானோர் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்து உள்ளது.
பாக்தாத்,
ஈராக் நாட்டில் கடந்த 2 வருடங்களுக்கு முன் ஐ.எஸ். தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டனர். எனினும் அங்கு லட்சக்கணக்கான பொதுமக்களின் வாழ்க்கை தொடர்ந்து மோசமடைந்த நிலையிலேயே உள்ளது. நல்ல வாழ்க்கை, அடிப்படை சேவைகள், வேலையின்மை உள்ளிட்ட பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. அங்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது.
இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். கடந்த 4 நாட்களாக அங்கு கடுமையான போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது. பாக்தாத்தில் உள்ள வரலாற்று சின்னமான தரீர் சதுக்கத்தை நோக்கி பேரணியாக சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க முயன்றனர். ஆனால் அதை மீறியும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேறினர். அவர்களை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்குவர். 4 ஆயிரம் பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story