டி.வி., பத்திரிகைகளில் பெயர் வருவதற்காக சிறுவனை 10-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய வாலிபர்


டி.வி., பத்திரிகைகளில் பெயர் வருவதற்காக சிறுவனை 10-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய வாலிபர்
x
தினத்தந்தி 8 Dec 2019 10:13 PM GMT (Updated: 8 Dec 2019 10:13 PM GMT)

டி.வி., பத்திரிகைகளில் பெயர் வருவதற்காக சிறுவன் ஒருவனை, 10-வது மாடியில் இருந்து வாலிபர் தூக்கி வீசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் மேற்கு பகுதியில் உள்ள ஈலிங் நகரை சேர்ந்தவர் ஜான்டி பிரேவரி (வயது 18). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ந்தேதி லண்டனில் உள்ள ‘டேட் மாடர்ன்’ அருங்காட்சியகத்துக்கு சென்றார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 6 வயது சிறுவன் தனது தாயுடன் அந்த அருங்காட்சியகத்துக்கு வந்திருந்தான். அப்போது ஜான்டி திடீரென அந்த 6 வயது சிறுவனை தூக்கிக்கொண்டு அருங்காட்சியகத்தின் மாடிக்கு ஓடினான். இதனால் அங்கு பெரும் பரபரப்பு உருவானது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஜான்டியை பிடிப்பதற்காக விரட்டி சென்றனர்.

ஆனால் அதற்குள் 10-வது மாடிக்கு சென்ற ஜான்டி அங்கிருந்து சிறுவனை கீழே தூக்கி எறிந்தான். 5-வது மாடியில் உள்ள மேற்கூரையின் மீது சிறுவன் விழுந்தான். இதில் பலத்த காயம் அடைந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டான். இதற்கிடையே ஜான்டியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்காக லண்டன் நகர கோர்ட்டில் ஜான்டி அண்மையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது எந்தவித பயமும், கவலையும் இன்றி மாறாக சிரித்துக்கொண்டே தன் மீதான குற்றச்சாட்டை ஜான்டி ஒப்புகொண்டார். அதுமட்டும் இன்றி, மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும், டி.வி. மற்றும் பத்திரிகைகளில் தனது பெயர் வரவேண்டும் என்பதற்காகவும் தான் இப்படி செய்ததாக கூறி அனைவரையும் அதிரவைத்தார்.

இதையடுத்து, ஜான்டியை குற்றவாளி என கூறி தீர்ப்பு அளித்த நீதிபதி, அவருக்கான தண்டனை விவரம் வருகிற பிப்ரவரி மாதம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

Next Story