பாகிஸ்தானில் புதிய நெருக்கடி: கோதுமை மாவு பற்றாக்குறையால் சப்பாத்திக்கு ஏங்கும் மக்கள்


பாகிஸ்தானில் புதிய நெருக்கடி: கோதுமை மாவு  பற்றாக்குறையால் சப்பாத்திக்கு ஏங்கும் மக்கள்
x
தினத்தந்தி 21 Jan 2020 7:23 AM GMT (Updated: 21 Jan 2020 7:23 AM GMT)

பாகிஸ்தானில் புதிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. கோதுமை மாவு பற்றாக்குறையால் மக்கள் சப்பாத்திகளுக்கு ஏங்கி வருகிறார்கள்.

இஸ்லாமபாத்

பாகிஸ்தான் தற்போது புதிய  நெருக்கடி ஒன்றை எதிர்கொள்கிறது. பாகிஸ்தானில் கோதுமை  மிகவும் அவசியமான  உணவுப்பொருள் ஆகும்.  பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களான பலுசிஸ்தான், சிந்து, பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா ஆகியவற்றில் உள்ள நகரங்கள் கோதுமை மாவு பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றன.  

இந்த மாகாணங்களில் மக்கள் சப்பாத்திகள் மற்றும் நாண்களுக்காக ஏங்குகிறார்கள் என்று பாகிஸ்தானின் செய்திகள் தெரிவிக்கின்றன.

கோதுமை மாவு நெருக்கடிக்கு அரசாங்கங்கள் ஒருவருக்கொருவரை குற்றம்சாட்டி வருகின்றன. மாவு நெருக்கடிக்கு பஞ்சாப் மற்றும் சிந்து மாகாண அரசாங்கங்களை இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் குற்றம் சாட்டி உள்ளது. ஆனால் இந்த பிராந்திய அரசுகள்  மத்திய அரசாங்கமான  இம்ரான் கான் அரசாங்கம் இந்த பிரச்சினையில் சரியான நேரத்தில் தலையிடவில்லை என்று குற்றம் சாட்டுகின்றன

தற்போது இந்த மாகாண மக்கள் அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக முக்கியமாக அரிசியைச் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

கடந்த பல மாதங்களாக கோதுமை மாவு நெருக்கடி நிலவுவதாக பாகிஸ்தானின் செய்தி நிறுவனமான டான் செய்தி வெளியிட்டுள்ளது, ஆனால் பிரதமர் இம்ரான் கான் மாகாண அரசாங்கங்களுக்கு விலைவாசி உயர்வு மற்றும் இலாபதாரர்களின் பதுக்கலுக்கு எதிராக செயல்பட உத்தரவு பிறப்பித்த பின்னர் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டது. 

கோதுமை மாவு பற்றாக்குறையால் பல நாண் விற்பனை செய்யும் பிரபல கடைகள் மூடப்பட்டு உள்ளன என்று பிபிசி தெரிவித்துள்ளது.

இதில் கைபர் பக்துன்க்வா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.  அதன் தலைநகரில் 2,500 க்கும் மேற்பட்ட நாண் விற்பனை கடைகள்  உள்ளன, ஏனெனில் இங்கு வசிப்பவர்கள் இந்த கடைகளிலிருந்து நாண்கள் வாங்க விரும்புகிறார்கள். இந்த கடைகளில் பல இப்போது மூடப்பட்டுள்ளன.

சிந்த் மாகாணத்தில் கோதுமை மாவுக்கான விகிதத்தை மாகாண அரசு ஒரு கிலோவுக்கு ரூ. 43 ஆக நிர்ணயித்துள்ளது. ஆனால் அரசாங்கம் உத்தரவை அமல்படுத்தத் தவறியதால் அரசாங்கத்தின் விலை ஒழுங்குமுறை உத்தரவு தோல்வியடைந்தது என்று ஆரி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மார்ச் 20 ஆம் தேதிக்குள் சிந்திலும், ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் பஞ்சாபிலும்  கோதுமை மாவு நெருக்கடி குறைய வாய்ப்புள்ளது என்று தேசிய உணவு பாதுகாப்பு (என்எஃப்எஸ்) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான்  மக்கள் கட்சி  தலைவர் பிலாவால் பூட்டோ-சர்தாரியும் இம்ரான் கான் அரசை குற்றம்சாட்டி உள்ளார்.  

கோதுமை ஏற்றுமதியாளராக இருந்த   பாகிஸ்தானை  இறக்குமதியாளராக மாற்றியுள்ளது. பாகிஸ்தான் கோதுமை மாவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இம்ரான் கான் அரசாங்கம் 40,000 டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியதால் பாகிஸ்தான் கோதுமை மாவு  நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

Next Story