கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 1868 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 1868 ஆக அதிகரித்துள்ளது.
பெய்ஜிங்,
சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது.
இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன. சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,868- ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,436 ஆக உள்ளது.
வைரஸ் தாக்குதலின் வீரியம் தற்போது குறைய தொடங்கி இருப்பதாக சீன தேசிய மருத்துவ கமிஷன் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலின் மையப்பகுதியான உகானில், பாதிப்பின் வேகம் கடந்த மாதம் 28-ந் தேதி 32.4 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த 15-ந் தேதி அது 21.6 சதவீதமாக குறைந்திருப்பதாக அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story