சீனாவை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கட்டிட இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலி


சீனாவை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கட்டிட இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலி
x
தினத்தந்தி 19 May 2020 10:15 PM GMT (Updated: 19 May 2020 9:26 PM GMT)

சீனாவை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

பீஜிங், 

சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் அந்த நாட்டை கடுமையாக உலுக்கியது. அங்குள்ள அனைத்து மாகாணங்களிலும் பரவிய இந்த உயிர்க்கொல்லி வைரசால் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் கொத்து கொத்தாக செத்து மடிந்தனர்.

இதனால் ஒட்டுமொத்த சீனாவும் ஆட்டம் கண்டது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் மக்களின் உயிரைக்காப்பாற்ற முடியாமல் சீனா விழிப்பிதுங்கி நின்றது.

எனினும் நகரங்களுக்கு ‘சீல்’ வைத்தல், ஊரடங்கை அமல்படுத்தி மக்களை தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் வைரஸ் பரவலை சீனா வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்தது.

அதன்படி கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தாலும் அதன் பிறப்பிடமான சீனாவில் வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அங்கு ஊரடங்கு உள்பட மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளன.

கொரோனா பேரிடரில் இருந்து மீண்டு சீன மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில், அந்த நாட்டுக்கு மற்றொரு பேரிடராக தென்மேற்கு மாகாணமான யுனானை நேற்று பயங்கர நிலநடுக்கம் தாக்கியது.

யுனான் மாகாணத்தில் கியாஜியா நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவானது. மேலும் இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

யுனான் மாகாணத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட நகரங்களை இந்த நிலநடுக்கம் கடுமையாக உலுக்கியது. வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.

இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர். கியாஜியா மற்றும் அதனை சுற்றியுள்ள பல நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரை மட்டமாகின.

இதில் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர். நிலநடுக்கத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

கட்டிட இடிபாடுகளில் இருந்து 4 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 24 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

எனினும் அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்துவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story