"இந்தியாவை தட்டி கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" சீனாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் கருத்து


இந்தியாவை தட்டி கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது சீனாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் கருத்து
x
தினத்தந்தி 28 May 2020 10:29 AM GMT (Updated: 28 May 2020 10:29 AM GMT)

இந்தியாவிற்கும், சீனாவிற்கு இடையே நடக்கும் மோதலால் பெரிய ஆபத்து வரப் போவதாக பாகிஸ்தான் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்

இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே இந்த மாத துவக்கத்தில் இருந்து பிரச்சினை நிலவி வருகிறது. கடந்த மே 5-ஆம் தேதி லடாக் எல்லையில் சீனாவின் போர் படைகள் அத்துமீறி உள்ளே நுழைந்தது. அதன் பின் சிக்கிம் எல்லையில் சீனாவின் படைகள் அத்து மீறியது.

இதனால் இரண்டு எல்லையிலும் சீனா மற்றும் இந்திய படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக தற்போது இரண்டு நாடுகளும் தங்கள் எல்லையில்  படைகளை குவித்து வருகிறது.

அதுமட்டுமின்றி, போருக்கு தயாராக இருக்கும் படி தன் நாட்டு இராணுவத்திற்கு சீனா அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்ததால், எப்போதும் வேண்டும் என்றாலும் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அருகில் இருக்கும் நாடான பாகிஸ்தான் இதுவரை எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது இந்த பிரச்சினை குறித்து பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி, இந்த எல்லை பிரச்சினையை சீனா பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயன்றது. ஆனால் இந்தியா இதற்கு அனுமதிக்கவில்லை. இந்தியா தொடர்ந்து அனுமதி இன்றி நேபாளம் அருகே கட்டுமான பணிகளை செய்தது.

இதுதான் பிரச்சினைக்கு காரணம். அண்டை நாடுகளுக்கு எதிராக செயல்படுவதுதான் இந்தியாவின் வழக்கம்.அண்டை நாடுகளுடனான உறவு தொடர்பாக இந்தியாவிற்கு நல்ல கொள்கை கிடையாது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இப்படித்தான் இந்தியா பறித்தது.

அங்கு அத்துமீறல்களை செய்யும் வகையில் இந்தியா இப்படி செய்து வருகிறது. ஆப்கானிஸ்தானை பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படுத்த முயன்று இந்தியா தோல்வி அடைந்துள்ளது. பலுசிஸ்தான் மூலம் பாகிஸ்தான் உள்ளே கலகம் விளைவிக்க நினைத்தது.

உலக நாடுகள் எல்லாம் இந்தியாவை தட்டி கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.இது தான் அதற்கான நேரம். அதேபோல் இந்தியா நேபாளம் உடன் சண்டை போட்டு வருகிறது. தற்போது சீனாவுடனும் இந்தியா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.இது மிகவும் ஆபத்தான விஷயம். பெரிய ஆபத்து இதனால் வர போகிறது. ஆசியாவின் அமைதி இதனால் பாதிக்கும், என்று குரேஷி குறிப்பிட்டு இருக்கிறார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இது குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவின் இந்துத்துவா ஆதிக்கம் கொண்ட அரசு மோசமான ஆதிக்க கொள்கை காரணமாகவும், நாசி செயல்பாட்டின் காரணமாகவும் அண்டை நாடுகளுக்கு ஆபத்தாக மாறியுள்ளது.குடியுரிமை சட்டம் மூலம் வங்கதேசத்தை இந்தியா சீண்டியது. லடாக் மூலம் நேபாளம், பாகிஸ்தான் , சீனாவை இந்தியா சீண்டி வருகிறது.

காஷ்மீரில் இந்தியா ஆக்கிரமிப்புகளை செய்து வருகிறது. அதேபோல் ஜெனீவா ஒப்பந்தத்தை மீறி இந்தியா போர் குற்றங்களை செய்து வருகிறது.

நான் ஏற்கனவே இது குறித்து எச்சரித்து இருக்கிறேன். பாசிச கொள்கை கொண்ட இந்திய அரசு இந்தியாவில் இருக்கும் மைனாரிட்டிகளுக்கு மட்டும் பிரச்சனை கிடையாது.அவர் அண்டை நாடுகளுக்கும், பிராந்தியத்திற்கும் பெரிய பிரசசினையாக மாறுவார்கள், என்று இம்ரான் கான் கூறியுள்ளார்.

Next Story