இந்தியாவின் மோசமான சுகாதார அமைப்புகளால் உருவான கொரோனா வைரஸ் சீனா குற்றச்சாட்டு


இந்தியாவின் மோசமான சுகாதார அமைப்புகளால் உருவான கொரோனா வைரஸ் சீனா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 28 Nov 2020 4:25 PM GMT (Updated: 28 Nov 2020 4:25 PM GMT)

கொரோனா வைரஸால் உலகமே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வைரசின் தீவிரம் மீண்டும் அதிகமாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், வைரஸ் உருவான இடம் பற்றி சீனா மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீஜிங்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  சீனாவின் உகான் நகரில் கொரொனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.  தற்போது கொரோனா வைரஸ்  உலக நாடுகளை உலுக்கி வருகிறது.
தொற்று பரவி ஏறத்தாழ ஒரு வருடங்கள் ஆக உள்ள நிலையில், இன்னும் இந்த வைரசைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  தடுப்பூசிகளும் இன்னும் பொது பயன்பாட்டுக்கு வரவில்லை. தொற்று பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.  ஆனால் வைரசை பரப்பிய சீனாவில் இந்த கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

தற்போதைய நிலவரப்படி உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  6.19  கோடியாக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை   4,27,66,954- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால்  14,48,183- பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உகானில் தொற்று பரவுவதற்கு முன்னர், இந்த தொற்று இத்தாலி உள்பட உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியதாக சீன அரசு கூறி வந்தது . தற்போது கொரோனா வைரஸ் இந்தியாவில் இருந்து உலகிற்கு முதன்முறையாக பரவியதாக இப்போது சீன விஞ்ஞானி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். 

சீன அறிவியல் அகாடமியின் விஞ்ஞானிகள் குழு கூறி உள்ளதாவது:-

கொரோனா வைரஸ் இந்தியாவில் 2019 கோடையில் தோன்றியிருக்கலாம். கொரோனா வைரஸ் விலங்குகளால் அசுத்தம் செய்யப்பட்ட நீர் மூலம் மனிதர்களுக்குள் நுழைந்தது . கொரோனா வைரஸ் இந்தியாவிலிருந்து  உகானை அடைந்தது என்றும் அங்கு அது அடையாளம் காணப்பட்டது . 

உகானில் காணப்பட்ட கொரோனா வைரஸ் ஒரு உண்மையான வைரஸ் அல்ல . விசாரணையில் வங்காளதேசம் , அமெரிக்கா, கிரீஸ், ஆஸ்திரேலியா, இந்தியா, இத்தாலி, செக் குடியரசு, ரஷியா அல்லது செர்பியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் தோன்றியதற்கான அறிகுறிகள் தெரியவந்துள்ளது. இந்தியா மற்றும் வங்காள தேசத்தில்  பலவீனமான பிறழ்வு மாதிரிகள் காணப்படுவதால், அங்கு முதல் தொற்று ஏற்பட்டிருக்கலாம்.

தண்ணீர் இல்லாததால், குரங்குகள் போன்ற காட்டு விலங்குகள் பெரும்பாலும் தண்ணீருக்காக கடுமையாக போராடுகின்றன. இது நிச்சயமாக மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான தொடர்பு அபாயத்தை அதிகரிக்கும். விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவது அசாதாரண வெப்பத்தால் என்று நாங்கள் கருதுகிறோம்.  இந்தியாவின் மோசமான சுகாதார அமைப்பு மற்றும் இளம் மக்கள் தொகை காரணமாக, இந்த நோய் பல மாதங்களாக கண்டறியப்படாமல் தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸின் மூலத்தை தீர்மானிக்க சீன குழு பைலோஜெனடிக் பகுப்பாய்வை (கொரோனா வைரஸ் பிறழ்வு பற்றிய ஆய்வு) பயன்படுத்தியது.

இதற்கிடையில், சீன விஞ்ஞானிகளின் இந்த தவறான கூற்று மற்ற விஞ்ஞானிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர் டேவிட் ராபர்ட்சன் டெய்லி மெயிலிடம் சீன ஆராய்ச்சி அதிக குறைபாடுகளைக் கொண்டுள்ளது என்றும் கொரோனா வைரஸ் குறித்த நமது புரிதலை சிறிதும் மேம்படுத்தவில்லை என்றும் கூறினார். கொரோனா வைரஸ் உகானில் தோன்றியதை மறைக்க சீனாமற்ற நாடுகளை நோக்கி கையை நீட்டுவது இது முதல் முறை அல்ல.

இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பு  தற்போது சீனாவில் கொரோனா வைரஸின் மூலத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கிறது. கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றியதாக உலக சுகாதார அமைப்பு சான்றுகள் காட்டுகின்றன. உலக சுகாதார அமைப்பு  தனது விசாரணைக் குழுவை சீனாவுக்கு அனுப்பி உள்ளது.

Next Story