அமெரிக்காவில் 5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது - அதிபர் ஜோ பைடன் தகவல்


அமெரிக்காவில் 5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது - அதிபர் ஜோ பைடன் தகவல்
x
தினத்தந்தி 27 Feb 2021 4:40 AM GMT (Updated: 27 Feb 2021 4:40 AM GMT)

அமெரிக்காவில் சாதனை அளவாக இதுவரை 5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

உலக அளவில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2 கோடியே 90 லட்சத்து 55 ஆயிரத்து 493 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதுவரை 5 லட்சத்து 20 ஆயிரத்து 878 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த ஜோ பைடன் தலைமையிலான அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அங்கு தற்போது பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

அங்கு நேற்று முன்தினம் நிலவரப்படி 5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், “எங்கள் நிர்வாகத்தின் முதல் 100 நாளில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி போட எண்ணியுள்ளோம். அதில் பாதியளவை இப்போது அடைந்து இருக்கிறோம். 

ஆனாலும் இது ஓய்வு எடுக்க வேண்டிய தருணம் இல்லை. நாம் நமது கைகளை சுத்தம் செய்ய வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். கடவுளின் பொருட்டு அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். அதிகமான மக்கள் தடுப்பூசி போடுகிறார்கள். வேகமாக இந்த தொற்றுநோயை நாம் வெல்லப்போகிறோம்” என்று தெரிவித்தார்.

Next Story