காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் - ஐ.நா. வலியுறுத்தல்


காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் - ஐ.நா. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 May 2021 11:39 PM GMT (Updated: 5 May 2021 11:39 PM GMT)

காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என, ஐ.நா. பொதுச் சபை தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

நியுயார்க்,

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் வோல்கன் போஸ்கிர், இந்த மாதம் இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், கொரோனா பரவல் காரணமாக அவரது இந்திய வருகை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் காஷ்மீர் பிரச்சினை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ஐ.நா. பொதுச் சபை தலைவர் வோல்கன் போஸ்கிர் கூறுகையில், “காஷ்மீர் பிரச்னைக்கு, இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதியான முறையில், சுமுக தீர்வு காண வேண்டும். காஷ்மீர் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண, இந்தியா - பாகிஸ்தான் இடையே, 1972ல் சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா, பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் பூட்டோ ஆகியோர் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தம், காஷ்மீர் விவகாரத்தில், மூன்றாவது நாடு தலையிடுவதையும் தடுக்கிறது. அதனால், சிம்லா ஒப்பந்தப்படி, காஷ்மீர் பிரச்னைக்கு, அமைதி தீர்வு காண, இந்தியாவும், பாகிஸ்தானும் முயற்சிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும் வங்கதேசம், பாகிஸ்தான் அழைப்பை ஏற்று, இம்மாதத்தில் அந்நாடுகளுக்கு செல்ல உள்ளதாகவும், காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண, பாகிஸ்தானிலும் இப்போது சொல்வதை தான் தெரிவிப்பேன் என்றும் அவர் கூறினார்.

Next Story