தென் ஆப்பிரிக்காவில் ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா


தென் ஆப்பிரிக்காவில் ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 July 2021 2:35 AM GMT (Updated: 3 July 2021 2:35 AM GMT)

தென் ஆப்பிரிக்காவில் இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது.

கேப் டவுன்,

தென் ஆப்பிரிக்க நாட்டில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 26 ஆம் தேதி ஒரே நாளில் 18 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஜனவரி மாதத்திற்கு பிறகு தற்போது மீண்டும் அங்கே தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை பதிவான தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் இது தான் அதிகபட்சம் ஆகும்.

அங்கு இதுவரை மொத்தம் 20 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சுமார் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தென் ஆப்பிரிக்க அதிபர்  சிரில் ரமாஃபோசா உத்தரவின்பேரில், அங்கு தற்போது கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம் தென் ஆப்பிரிக்காவில் தற்போது கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அங்கு மொத்தம் உள்ள 6 கோடி மக்கள் தொகையில், இதுவரை 33 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. உலக சுகாதார நிறுவனத்தின் கோவேக்ஸ் திட்டத்தின் மூலம் தென் ஆப்பிரிக்காவிற்கு இதுவரை 14 லட்சம் பைசர் தடுப்பூசிகளும், 12 லட்சம் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story