உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் ராக்கெட்டை விண்ணில் ஏவியது, தென்கொரியா


உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் ராக்கெட்டை விண்ணில் ஏவியது, தென்கொரியா
x
தினத்தந்தி 21 Oct 2021 5:59 PM GMT (Updated: 21 Oct 2021 5:59 PM GMT)

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் ராக்கெட்டை தென்கொரியா விண்ணில் ஏவி இருக்கிறது.

தென்கொரியாவின் முதல் ராக்கெட்

தென் கொரியாவில் முதன்முதலாக உள்நாட்டில் நூரி என்ற ராக்கெட்டை அங்குள்ள கொரியா விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும் உருவாக்கினர். இந்த ராக்கெட் 47 மீட்டர் (154 அடி) நீளம் கொண்டது. இந்த ராக்கெட் 1.6 பில்லியன் டாலர் மதிப்பில் (சுமார் ரூ.12 ஆயிரம் கோடி) உருவாக்கப்பட்டடது. இந்த ராக்கெட், சியோலில் இருந்து 310 மைல் தொலைவில் உள்ள கோஹுங் என்ற இடத்தில் உள்ள நாரோ விண்வெளி மையத்தில் இருந்து நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த ராக்கெட் திட்டமிட்ட நேரத்தை விட ஒரு மணி நேரம் தாமதமாக விண்ணில் செலுத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ராக்கெட்டின் வால்வுகளை என்ஜினீயர்கள் சோதிப்பதில் இந்த தாமதம் நேரிட்டதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி காற்று பலமாக வீசியதும், இன்ன பிற காரணங்களும் இந்த ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவதில் சவாலாக அமைந்தன என தகவல்கள் கூறுகின்றன.

அதிபர் பார்த்தார்

இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதை அந்த நாட்டின் அதிபர் மூன் ஜே இன் பார்த்தார்.

இந்த ராக்கெட் பூமியில் இருந்து 372-497 மைல் தொலைவில் சுற்றுப்பாதையில் 1.5 டன் எடை கொண்ட ‘டம்மி பேலோடு’ வெளியிடுவதில் வெற்றி கண்டதா, இல்லையா என்பது உடனடியாக தெரிய வரவில்லை. ராக்கெட்டின் முதல் கட்டம், முக்கிய பூஸ்டர் நிலை ஆகும். இது ராக்கெட்டில் இருந்து பிரிந்த பிறகு ஜப்பானின் தென்மேற்கு கடல் பகுதியில் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இரண்டாவது நிலை, பிலிப்பைன்ஸ் நாட்டின் கிழக்கே பசிபிக் கடலில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மிகச்சிறிய அளவிலான மூன்றாவது கட்டம், பேலோடை எடுத்துச் சென்று அதன் சுற்றுப்பாதையில் வைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. 1990-களின் முற்பகுதியில் இருந்து தனது செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு தென்கொரியா பிற நாடுகளை நம்பி வந்தது.

10-வது நாடு

இந்தநிலையில் இப்போதுதான் தனது சொந்த தொழில் நுட்பத்தில் விண்வெளிக்கு செயற்கைக்கோளை அனுப்பும் 10-வது நாடாக மாறுவதற்கு தென் கொரியா முயற்சிக்கிறது.

இதையொட்டி தென்கொரிய அதிகாரிகள் கூறும்போது, “நாட்டின் விண்வெளி லட்சியங்களுக்கு இந்த ராக்கெட் திறன் மிக முக்கியமானதாக இருக்கும். இதில் மேம்பட்ட தகவல் தொடர்பு செயற்கைகோள்களையும், ராணுவ உளவு செயற்கைக்கோள்களையும் அனுப்பும் திட்டங்களும் அடங்கும். 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப வேண்டும் என்றும் தென்கொரியா இலக்கு வைத்துள்ளது” என தெரிவித்தனர்.

அடுத்த ஆண்டு மே மாதம் மற்றொரு ராக்கெட்டையும் விண்ணில் ஏவி சோதிக்க தென்கொரியா முடிவு செய்துள்ளது. தென்கொரியா கடைசியாக 2013-ம் ஆண்டு ஒரு ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. ஆனால் இது ரஷிய தொழில் நுட்பத்தில் உருவானது ஆகும்.


Next Story