“நான் தெருவில் இறங்கி நடந்தால்...” எதிர்க்கட்சிகளுக்கு மிரட்டல் விடுத்த இம்ரான்கான்!


“நான் தெருவில் இறங்கி நடந்தால்...” எதிர்க்கட்சிகளுக்கு மிரட்டல் விடுத்த இம்ரான்கான்!
x
தினத்தந்தி 25 Jan 2022 6:10 AM GMT (Updated: 25 Jan 2022 6:10 AM GMT)

எதிர்க்கட்சிகள் அரசை கவிழ்க்க முற்பட்டால் கடும் எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என்று இம்ரான்கான் பேசியுள்ளார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார். பாகிஸ்தானில் ஆளும் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதத்தில் அவர் தனது உரையில் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது:-

பணவீக்கம் பிரச்சினை தன்னை தூங்கவிடாமல் செய்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் எதிர்க்கட்சிகள் அரசை கவிழ்க்க முற்பட்டால் கடும் எதிர்வினைகளை சந்திக்க நேரிடும்.

பாகிஸ்தானில் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.எரிபொருள் விலையேற்றம் கண்டுள்ளது. ஆனால் இது உலகளாவிய பிரச்சினையாக உள்ளது. கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பால் இத்தகைய சவால்கள் எழுந்துள்ளன.

தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி அதிகாரத்திற்கு வந்தபோது நாட்டில் கடும் பணப்பற்றாக்குறை நிலவியது.

அமெரிக்கா, கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பிலிருந்து மீண்டு வர, மக்கள் நலனுக்காக 6 லட்சம் கோடி டாலர்களை செலவிடுகிறது. ஆனால் பாகிஸ்தானில் 800 கோடி டாலர்களை மட்டுமே செலவிடுகிறோம். இரண்டு நாடுகளின் நிலவரங்களையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

என்னை வற்புறுத்தி பதவி விலக சொன்னால், நான் ஆபத்தானவனாக மாற நேரிடும்.மார்ச் 23ந்தேதி நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் பேரணி நிச்சயம் தோல்வியில் தான் முடியும். 

நான் தெருவில் இறங்கி நடந்தால் அதன்பின், உங்களுக்கு(எதிர்க்கட்சிகள்) ஒளிந்து கொள்வதற்கு கூட இடம் கிடைக்காது. எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான ஷேபாஸ் சரீப்பை இந்த தேசத்தின் குற்றவாளியாக பார்க்கிறேன்.

மேலும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ்  தலைவர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல் தப்பித்து வருகிறார். எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை மிரட்டி வருகின்றன. இந்த அரசாங்கம் தற்போதைய பதவிக் காலத்தை நிறைவு செய்து அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story