‘அடுத்த மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க வாய்ப்பு ’ - ஜோ பைடன் எச்சரிக்கை


‘அடுத்த மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க வாய்ப்பு ’ - ஜோ பைடன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 29 Jan 2022 12:25 AM GMT (Updated: 29 Jan 2022 12:25 AM GMT)

பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கான தெளிவான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

வாஷிங்டன்,

நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிராகரித்ததை தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் எல்லையில் தனது படைகளை குவித்து வருகிறது. ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பதற்காக எல்லையில் படைகளை குவித்து வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் ரஷ்யா இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது.

இந்த நிலையில் அடுத்த மாதம் (பிப்ரவரி) உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கான தெளிவான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் “உக்ரைன் விவகாரம் தொடர்பாக அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை, ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தால், அதன் நட்பு நாடுகளுடன் சேர்ந்து தீர்மானமாக பதிலளிக்க அமெரிக்கா தயாராக இருப்பதை ஜனாதிபதி பைடன் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்” என கூறப்பட்டுள்ளது.

Next Story